Tamilnadu

அரசு ஊழியர்களின் அமோக ஆதரவு : தபால் வாக்குகளில் கணிசமாக அள்ளிய தி.மு.க கூட்டணி!

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 38 இடங்களில் 37 இடங்களைக் கைப்பற்றியது தி.மு.க கூட்டணி. இதில், கடந்த தேர்தல்களைப் போலவே தபால் வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது தி.மு.க கூட்டணி.

தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர். தாங்கள் சார்ந்த தொகுதியிலேயே தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் இடிசி எனப்படும் தேர்தல் பணி சான்றிதழ் மூலம் பணிக்காக செல்லும் வாக்குச்சாவடியிலேயே வாக்கைச் செலுத்தலாம்.

வேறு தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குச் செல்பவர்கள் தபால் வாக்குகளைச் செலுத்தலாம். அரசு ஊழியர்களில் பலருக்கு தபால் வாக்குக்கான படிவம் கொடுக்காமல் திணறடித்தன அரசும், தேர்தல் ஆணையமும். ஆனாலும், சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான தபால் வாக்குகள் செலுத்தப்பட்டன.

File image

செலுத்தப்பட்ட தபால் வாக்குகளில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதிலும், 12,915 பேரின் வாக்குகள் தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டன.

அதில், 1 லட்சத்து 37 ஆயிரத்து 379 தபால் வாக்குகள் தி.மு.க கூட்டணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணிக்கு வெறும் 39,458 தபால் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் வழக்கம்போல் இந்தத் தேர்தலிலும் பெருவாரியான தபால் வாக்குகள் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளன.