Tamilnadu

பொள்ளாச்சி விவகாரம் : முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சி.பி.ஐ..!

பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்த நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும் முதலில் இருந்து விசாரணையை தொடங்கினர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தற்போது குற்றப்பத்திரிக்கையை திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐவருக்கு எதிராக கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் என்ற அடைப்படையில் இந்த வழக்கானது பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும், அவ்வாறு நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வீடியோவை எடுத்து, பெண்ணை மிரட்டி, பணம் பறிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் நடந்திருப்பதாகவும் அவர்கள் இந்த முதல் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். அடுத்தகட்ட விசாரணைகள் நிறைவு பெற்றதும் அடுத்தக்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.