Tamilnadu

அரசியல் ஆதாயத்திற்காக தாக்குதல் நடத்தியுள்ளது பா.ம.க - பொன்பரப்பி குறித்து சிபிஎம் அறிக்கை

பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது சிபிஐ(எம்). அக்கட்சியின் மனித உரிமை பாதுகாப்பு குழுவின் சார்பில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கைய வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது அவர் பேசியதாவது, “பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல் குறித்து அனைத்து மக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரிடம் விபரங்கள் கேட்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் ஆதாயத்திற்காக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்து முன்னணி அமைப்பும் இதில் ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் ,” அரசியல் ஆதாயத்திற்காக சாதியை பயன்படுத்தி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது. 300 பேர் அந்த பகுதியில் வாக்களிக்கவில்லை. அதற்கு காரணம் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றே அவர்களை வாக்களிக்க விடமால் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். திருமாவளவன் தோல்வி அடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த பொன்பரப்பி கலவரம் நடத்தப்பட்டுள்ளது.

பா.ம.க அரசியலுக்கு வந்த பிறகு தான் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்ததுள்ளது. தமிழக காவல்துறை, தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், பாதிக்கப்பட்டவர்கள் மீதும் சம அளவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். திட்டமிட்ட தாக்குதலை காவல்துறை சமநிலையில் வைத்து பார்க்க கூடாது. மேலும் பொன்பரப்பி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டத்தை முழுவதுமாக அமல் படுத்த வேண்டும். ரேசன் கடை, ஏடிஎம் உள்ளிட்ட வசதிகள் அமைத்து தர வேண்டும், சேதமடைந்த வீடுகளை சரிசெய்து தரவும், நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசிற்கு கோரிக்கை வைக்கின்றோம்.

தென் மாவட்டத்தில் கலவரங்கள் நடக்கும் போதெல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்வை நோக்கி அங்கு போய் நின்றிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ இது போன்ற சாதியக் கலவரங்களை அலட்சியத்தோடு தான் அனுகுகிறது” என்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.