Tamilnadu

அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான TNPSC தேர்வு ஒத்திவைப்பு!

நாடு முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், மே 19-ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது; "இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலை வரும் 19ம் தேதி அன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ளது.

இத்தேர்தலை கருத்தில் கொண்டும் ஒருசில நிர்வாக காரணங்களுக்காகவும், 19ம் தேதி அன்று நடைபெற இருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான எழுத்து தேர்வை 25.05.2019 அன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.