Tamilnadu

இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால் போலீசார் கண்டுகொள்வதில்லை: நீதிமன்றம் கண்டனம்!  

கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 நண்பர்கள் சேர்ந்து மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த கார் மீது பைக் மோதியது. அதில் மோட்டார் சைக்களில் பயணம் செய்த கணேசன், ரகு ஆகியோர் காயமடைந்தனர்.

இதையடுத்து, தங்களுக்கு வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி இருவரும் சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்றம் கணேசனுக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், ரகுவுக்கு 87 ஆயிரத்து 750 ரூபாய் இழப்பீடும் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு கடந்த 2013ல் உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டு தொகையை அதிகரிக்கக் கோரி கணேசன், ரகு ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, மனுதாரர்கள் உட்பட நான்கு பேர் ஒரே வாகனத்தில் செல்லும்போது, இருசக்கர வாகனம் ஓட்டுபவருக்கு கைப்பிடியை இயக்க சிரமம் ஏற்படும் என்பதாலும், நிலைதடுமாறும் சூழல் ஏற்படும் என்பதாலும் இந்த விபத்தில் அவர்களுக்கும் சமமான பங்கு உள்ளது என்பதை கருத்தில் கொண்டே தீர்ப்பாயம் இழப்பீடு நிர்ணயித்துள்ளதாக கூறி, மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இருசக்கர வாகனத்தில் விதிகளுக்கு முரணாக 2 பேருக்கு மேல் பயணம் செய்தாலும் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தார் நீதிபதி.