Tamilnadu

காழ்ப்புணர்ச்சியோடு போலிச் செய்தி - திராவிடக் கருத்தியலாளர்கள் மீதான தாக்குதல்!

ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வின் பாசிச சிந்தனைகளுக்கெதிராக சமூக வலைதளங்களில் களமாடும் திராவிடக் கருத்தியலாளர்கள் மீது திட்டமிடப்பட்டு அவதூறு பரப்பபப்பட்டு வருகிறது. கருத்தியல் எதிர்வினைகளை வாதங்களால் எதிர்கொள்ள இயலாதவர்கள் அருவருப்பான பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, போலிச் செய்திகளை வெளியிடும் பா.ஜ.க ஆதரவு ஃபேஸ்புக் பக்கமான ‘போர் அடிச்சா மீம் போடுவோம் ஹாங்’ எனும் பக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீஃபன் மீது வன்மத்தைக் கக்கும் பொய்ச் செய்தி ஒன்று சமீபத்தில் பகிரப்பட்டுள்ளது.

அந்தப் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில், “இவன்தான் திருச்சியில் 6 வயது சிறுமியை கற்பழித்து பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினர்.” எனக் குறிப்பிட்டு ஸ்டீஃபனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படியொரு சம்பவத்தில் தி.க-வைச் சேர்ந்த யாரும் குற்றம்சாட்டப்படவில்லை என்பது தெரிய வருகிறது. இந்தச் செய்தியை உண்மை என நம்பியும் அல்லது தெரிந்தே வன்மத்தை விதைக்கும் விதமாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.

‘திராவிட விதைகள்’ எனும் அமைப்பை நடத்தி வரும் சேலத்தைச் சேர்ந்த ஸ்டீஃபன், திராவிட இயக்க கருத்தியல் ஆதரவாளர். பா.ஜ.க-வை சமூக வலைதளத்தில் தீவிரமாக விமர்சித்து எழுதியும், இயங்கியும் வரும் இவரை அவமதிக்கும் விதமாகத்தான் மேற்கண்ட அவதூறு செய்தியை வெளியிட்டுள்ளது மேற்குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கம்.

திராவிட இயக்க கருத்தியலுக்கு ஆதரவாக தான் எழுதிவருவதை விரும்பாத சிலர் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகு கேடுகெட்ட செயலில் ஈடுபட்டிருக்கலாம் என ஸ்டீபன் கூறியுள்ளார். பரவிவரும் இந்தப் பொய்ச் செய்தியால் தானும், தன் குடும்பத்தினரும் மன உளைச்சல் அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஸ்டீஃபன்.