Tamilnadu

வாக்களிக்கச் செல்லும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

நாளை தமிழகத்தில் 37 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. புதுச்சேரியில் 1 மக்களவை மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்களிக்க செல்லும் முன் நீங்கள் பின் வரும் தகவல்களை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.

1. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மதுரையில் சித்திரைத் திருவிழா நடப்பதால் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும்.

2. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா, எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும் போன்ற தகவல்களை nsvp.in என்ற இணையதளத்தில் அல்லது 1950 என்ற இலவச சேவை எண்ணைக் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

3. பூத் ஸ்லிப்போடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

4. வாக்குச் சாவடிக்குள் மொபைல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாது.

5. வேட்பாளரின் பெயர் மற்றும் படம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதியப்பட்டிருக்கும். அதில் நீங்கள் விரும்பும் வாக்காளரின் பெயருக்கு நேராக இருக்கும் பொத்தானை அழுத்தவும். சிவப்பு லைட்டுடன் பீப் சத்தம் கேட்டால் உங்கள் வாக்கு பதியப்பட்டதாக பொருள்.

6. நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை அருகில் இருக்கும் விவிபாட் (VVPAT) எந்திரத்தில் பாருங்கள். நீங்கள் வாக்களித்த வாக்காளரின் சின்னம் பேப்பரில் பிரிண்ட் செய்யப்பட்டு விவிபாட் எந்திரத்தில் காட்டப்படும். பின் அந்த எந்திரத்துக்குள்ளேயே பேப்பர் சேமித்து வைக்கப்படும். அதிகபட்சம் 7 விநாடிகளே நீங்கள் அந்த பேப்பரை பார்க்க முடியும்.

7. உங்கள் தொகுதியில் போட்டியிடும் வாக்காளர்கள் பற்றி தெரிந்து கொள்ள myneta.info என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.