Tamilnadu

சென்னையில் 700 அடிக்கும் கீழ் சென்ற நிலத்தடி நீர் 

இந்த வருடம் எதிர்பார்த்த அளவிற்கு பருழமழை பெய்யாததால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை நிலத்தடி நீர் மிகவும் குறைந்துள்ளது. மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், திநகர், ராயபேட்டை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் சென்ற வருடம் 150 முதல் 200 அடியில் இருந்த நிலத்தடி நீர், இந்த வருடம் 400 அடிக்கு சென்றுள்ளது. சென்னையின் தெற்கு புறநகர் பகுதியில் நிலத்தடி நீர் 700 அடிக்கு சென்றுள்ளது.

கிண்டி, ஆலந்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் பகுதியில் நிலத்தடி நீர்படுக்கை பாறை போன்று இருப்பதால் தொடர்ந்து நீர் வழங்க முடியாது என்று மெட்ரோ நீர் அதிகரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய சென்னையில் உள்ள வண்டல் மண்ணாலான நீர் தேக்கங்களும் தற்போது வறண்டு விட்டது. வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், போரூர், மயிலாப்பூர் போன்ற இடங்களில் இருக்கும் நீர்த்தேக்கங்களும் வறண்டுவிட்டது.

சென்னையில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் 200 அடியில் கிடைத்த தண்ணீர், தற்போது 400 முதல் 700 அடிக்கு சென்று விட்டதாக மெட்ரோ குடிநீர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனி வீடு வைத்திருக்கும் நபர்கள் நீலத்தடி நீர் கிடைக்கவேண்டும் என்று ஆழமாக தோண்டுவதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உப்புத்தன்மை அதிகமாகிறது என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்