Sports
“ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.. கட்டாயப் படுத்தப்பட்டாரா?” - முழு விவரம் அறிய!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவருமான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியே, இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும்.
35 வயதான பென் ஸ்டோக்ஸ், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நான்காவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தனது ஓய்வு முடிவை சக வீரர்களிடம் தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படும் பென் ஸ்டோக்ஸ், நாட்டின் பல மறக்க முடியாத வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
குறிப்பாக, 2019ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து இங்கிலாந்து முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அதே ஆண்டில் ஆஷஸ் தொடரின் ஹெடிங்லி டெஸ்டில் அவர் விளாசிய ஆட்டமிழக்காத 135 ரன்கள், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும், 2016ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 258 ரன்கள் குவித்தது, அவரது டெஸ்ட் வாழ்க்கையின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும்.
இந்த ஓய்வு அறிவிப்பு வெளியாகும் சில வாரங்களுக்கு முன்பு, பென் ஸ்டோக்ஸ் ஒழுங்கு விதிமுறை தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு, பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் அணியின் நள்ளிரவு ஊரடங்கு விதியை மீறி லண்டனில் உள்ள நைட் கிளப்பிற்குச் சென்றதாக கூறப்பட்டது. அங்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு அதிகாரி மற்றும் சரசன்ஸ் ரக்பி வீரர் ஒருவரும் சம்பந்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, கிரிக்கெட் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை நடத்தும் வரை, இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், ஜோ ரூட் இடைக்கால கேப்டனாக அணியை வழிநடத்தினார்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் எந்த ஒழுங்குமுறையையும் மீறியதாக நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என கிரிக்கெட் ஒழுங்குமுறை அமைப்பு தெரிவித்தது.
மேலும், நைட் கிளப்பில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் பென் ஸ்டோக்ஸுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் அந்த சம்பவத்தை நேரில் கூட காணவில்லை என்றும், கஸ் அட்கின்சன் எந்தவித எதிர்த்தாக்குதலிலும் ஈடுபடாமல் தாக்குதலுக்கு உள்ளானவர் என்றும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இருப்பினும், இங்கிலாந்து அணி வீரர்களுக்கான ஒப்பந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உயர்ந்த ஒழுக்கநெறி மற்றும் அணியின் நலனைக் காக்கும் கடமையை இருவரும் மீறியதாகக் கருதப்பட்டதால், எழுத்துப்பூர்வ எச்சரிக்கை வழங்கப்பட்டது. இரண்டாவது டெஸ்டில் விளையாட அனுமதிக்கப்படாததே போதுமான தண்டனையாக கருதப்பட்டதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
மூன்றாவது டெஸ்டுக்கு முன்னதாக அணியில் மீண்டும் இணைந்த பென் ஸ்டோக்ஸ், தனது முதல் செயல் சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்பதுதான் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், நான்காவது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு அணியினரிடம் அவர் உருக்கமாக பேசியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
அப்போது அவர் கூறுகையில்,அடுத்த இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும், இங்கிலாந்துக்காக விளையாடும் வீரராகவும் இது எனது கடைசி இரண்டு நாட்கள். இந்த முடிவுக்கான காரணங்களைப் பற்றி பின்னர் பேசலாம்.
இந்த அணிக்காகவும், உங்களுக்காகவும், நமக்கு முன் விளையாடியவர்களுக்காகவும் நான் பலமுறை என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். இப்போது இன்னும் ஒருமுறை அதையே செய்ய வேண்டியுள்ளது.
நாம் வெற்றிபெறுகிறோமா, தோற்கிறோமா என்பது முக்கியமல்ல. கடந்த இரண்டு நாட்களில் இந்த அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும், ஒரே ஒரு பெண் ஊழியரும் கூட தங்களின் முழு அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற திருப்தியுடன் நான் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டும். அதையே நான் உங்களிடமும் கேட்டுக் கொள்கிறேன், என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
ஜோ ரூட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பொறுப்பை ஏற்ற பென் ஸ்டோக்ஸ், பிரெண்டன் மெக்கல்லத்துடன் இணைந்து அதிரடி அணுகுமுறையைக் கொண்ட புதிய டெஸ்ட் கிரிக்கெட் பாணியை உருவாக்கினார்.
அவரது தலைமையில், டிரெண்ட் பிரிட்ஜ் டெஸ்டுக்கு முன்பாக இங்கிலாந்து 24 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, 17 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது. இரண்டு போட்டிகள் மட்டுமே டிராவில் முடிந்தன.
பென் ஸ்டோக்ஸின் ஓய்வு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிச்சர்ட் தாம்சன் கூறுகையில்,
“இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகவும், தனது தலைமுறையின் அடையாளமாகவும் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். மிகுந்த அழுத்தமான தருணங்களில் அவர் வெளிப்படுத்திய ஆட்டமும், வெற்றிக்காக அவர் காட்டிய விடாமுயற்சியும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு என்றும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்” என்றார்.
மேலும், 2019 மற்றும் 2022 உலகக் கோப்பை வெற்றிகள், ஹெடிங்லி ஆஷஸ் இன்னிங்ஸ் மற்றும் டெஸ்ட் அணியை துணிச்சலுடன் வழிநடத்திய விதம் ஆகியவை அவரை இங்கிலாந்து கிரிக்கெட்டின் அடையாளமாக மாற்றியுள்ளன. அவரது சாதனைகள் ஏராளமான இளம் வீரர்களுக்கு ஊக்கமாக இருக்கும், என்றும் அவர் பாராட்டினார்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் கோல்டும், உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது. அவரது சாதனைகள் நீண்ட காலம் நினைவுகூரப்படும், என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் டெஸ்டுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அதே தொடரில் ஓய்வு அறிவித்த இரண்டாவது நட்சத்திர வீரராக பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார்.
Also Read
-
“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.. உடன்பிறப்புக்களே தயாராகுங்கள்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தவெக அமைச்சர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்... 15 நாட்கள் மட்டுமே கெடு... விவரம் உள்ளே!
-
போதை பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ : தவெக அமைச்சருக்கு எதிராக களமிறங்கும் திமுக மாணவர் அணி !
-
கடலூர் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி... ஒரே வாரத்தில் 2 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !