Sports
வாழ்வா? சாவா? ஆட்டம், வீணான கனடா வீரரின் அதிரடி சதம்: சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த நியூசிலாந்து!
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் 2026ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் ஏ,பி,சி மற்றும் டி என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா முதலிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. பிற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வகையில் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், டி பிரிவில் நியூசிலாந்து - கனடா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கனடா அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கனடா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. கனடா அணியில் தனி வீரராக யுவராஜ் சாம்ரா அதிகபட்சமாக 65 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸருடன் அதிரடியாக ஆடி 110 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சதமடித்த இளம்வயது வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் 19 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பாக 22 வயதில் பாகிஸ்தான் வீரர் அகமது ஷெசாத் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 23 வயதில் சதமடித்திருந்தார். மேலும், ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் ஒரு அசோசியேட் நாட்டிலிருந்து சதம் பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையையும் யுவராஜ் சாம்ரா பெற்றுள்ளார்.
பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 15.1 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 59* ரன்களும், கிளென் பிலிப்ஸ் 76* ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.
இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஜிம்பாப்வே அணி, 5 புள்ளிகளைப் பெற்று குரூப் 'பி' பிரிவில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
அங்கு ஜிம்பாப்வே அணி, இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய வலுவான அணிகளுடன் மோத உள்ளது. அதே சமயம், இன்று ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டி மழையினால் கைவிடப்பட்டதால், அயர்லாந்து அணியும், ஆஸ்திரேலியா அணியும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரு அணிகள் இந்தப் பிரிவிலிருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சூப்பர் 8 சுற்றில் வரும் 26ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது ஜிம்பாப்வே அணி.
கிட்டதட்ட சூப்பர் 8 சுற்றுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதால் அடுத்தடுத்து நடைபெறும் ஆட்டங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.4000 கோடி நிதி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தது என்ன?
-
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு : இடைக்கால பட்ஜெட் - முக்கிய அம்சங்கள் என்ன?
-
“25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” : சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
-
அமித்ஷா பேச்சை கேட்டு ரங்கசாமி சிரிக்கிறார் : இரட்டை எஞ்சின் புதுச்சேரியிலும் டப்பா எஞ்சின் தான்!
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !