Sports

2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி… ஆதரவாக பேசிய தோனி! முழுவிவரம் உள்ளே!

2027 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாடுவதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி ஆதரவு அளித்துள்ளார். இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் அடுத்த 50 ஓவர் உலககோப்பையில் விளையாடும் போது 39 வயதையும், விராட் கோலி 38 வயதையும் தொடுவார்கள். டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இருவரும் தற்போது, இவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள்.

இதனால், ரோகித், விராட் இருவரையும் நீக்கிவிட்டு, இளம் வீரர்களை கொண்ட அணியை உருவாக்க கம்பீர் திட்டமிட்டு வருவதாக தகவல் நீண்ட நாட்களாகவே உலாவி வருகிறது. இந்தச் சூழலில் தோனி, ரோகித், கோலிக்கு ஆதரவாக பேசி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். “ஒருநாள் போட்டியில் வீரர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பது வயது அல்ல, அவர்களின் ஆட்டத்திறன் மற்றும் உடல் தகுதியே தீர்மானிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

சமீபத்தில் நடைபெற்ற தனியார் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.எஸ்.டோனி, 30களில் உள்ள அனுபவமிக்க வீரர்களை எளிதாக ஒதுக்கிவிடக் கூடாது என்று தனது கருத்தினை தெளிவுபடுத்தினார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து இருவரும் விலகியதால், அவர்கள் மீதான விமர்சனம் அதிகரித்த சூழலில் இக்கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பாரிக்கப்படுகிறது.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ள தோனி, “அடுத்த உலகக் கோப்பையில் ஏன் விளையாட கூடாது? வயது ஒரு அளவுகோல் அல்ல, ஆட்டத்திறன், உடல் தகுதியே முக்கிய அளவுகோல்கள் என்றார். வயது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வீரரை எடைபோடக் கூடாது என கூறியுள்ளார்.

வீரர்களின் உடல் தகுதியின் அவசியத்தை விளக்கிய தோனி, "22 வயதாக இருந்தாலும், உடல் தகுதி இல்லாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியாது". வீரர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு, நாட்டிற்காகப் பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், அவர்கள் ஏன் விளையாடக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணிக்காக அனைத்து வகையான உலகக் கோப்பையும் வென்ற கேப்டன் தோனி, இளம் அணியில் அனுபவமிக்க வீரர்களின் மதிப்பை வலியுறுத்தினார். “சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒருவர் இல்லாவிட்டால் 20 வயதில் உள்ள வீரருக்கு எப்படி அனுபவம் கிடைக்கும்," என்ற கேள்வியை எழுப்பினார்.

"வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் அணியில் தொடர்வார்கள். உடல் தகுதி இல்லாவிட்டால் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள். ஆனால் உலககோப்பை போன்ற பெரிய போட்டிகளில் சீனியர் வீரர்களின் அனுபவம் கண்டிப்பாக  தேவை”.

இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பிய நிலையில் சமீபத்தில் அவர்கள் ஆடிய ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், கோலி 9 போட்டிகளில் 88 சராசரியுடன் 616 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் ஷர்மா 51 சராசரியுடன் 409 ரன்கள் சேர்த்துள்ளார். 

இனி அடுத்த ஒருநாள் தொடர் ஜூலையில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள நிலையில், தோனியின் இந்த கருத்தை கோலி, ரோகித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read: டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம் ஆனால்… பாகிஸ்தானின் முடிவுதான் என்ன!