Sports

கேரளாவுக்கு வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : தேதி, போட்டிகள் குறித்த விவரம் வெளியானது !

இந்தியா கால்பந்து அரங்கில் உலகளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிரிக்கெட்டுக்கு இணையாக கால்பந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும்ம், கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட்டை விட அதிகம் வரவேற்பு பெரும் விளையாட்டாக கால்பந்து இருக்கிறது என்று சொன்னாலும் அது தவறில்லை.

கேரளாவில் அர்ஜென்டினா, பிரேசில், போர்த்துக்கல் ஆகிய அணிகளுக்கு அதிகளவில் கால்பந்து ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கதாநாயர்களாக கொண்டாடட்பட்டு வருகிறார்கள். கடந்த உலககோப்பையை அர்ஜென்டினா அணி வென்றபோது அது கேரளத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

உலகக்கோப்பைத் தொடரில் அர்ஜென்டினா அணிக்கு கேரள ரசிகர்கள் அளித்த ஆதரவு அர்ஜென்டினா வரை எட்டியது. அதைத் தொடர்ந்து இதற்கு நன்றி செலுத்தும் விதமாக மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வரும் என தகவல் வெளியானது.கேரளாவுக்கு நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட வருமாறு அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தை கேரள அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தங்களை ஆதரித்த கேரள ரசிகர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அர்ஜென்டினா அணி கேரளாவுக்கு வந்து கால்பந்து விளையாடுவதாக அறிவித்தது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 25-ம் தேதி அர்ஜென்டினா கால்பந்து அணி கேரளாவுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரகிமான், "மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி வரும் அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை கேரளாவுக்கு வந்து 2 சர்வதேச போட்டிகளில் பங்குபெறும்"என்று கூறியுள்ளார். இந்த தகவல் கேரளத்தை தாண்டி இந்திய கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: இவர்தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்- தமிழ்நாடு வீரரை புகழ்ந்து பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!