Sports
“இந்த ஆண்டோடு PSG அணியிலிருந்து வெளியேறுகிறேன்” - நட்சத்திர வீரர் எம்பாப்பே அறிவிப்பு !
கடந்த 2022- ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்த இறுதி போட்டியில் வென்ற மெஸ்ஸி உலகளவில் கொண்டாடப்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஹட் ட்ரிக் கோல் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருதை வென்ற கைலியன் எம்பாப்பே அதிகம் கவனிக்கப்பட்டார். மெஸ்ஸி -ரொனால்டோவின் காலத்துக்கு பின் அடுத்த உலக சூப்பர் ஸ்டாராக கைலியன் எம்பாப்பே வருவார் என கால்பந்து வல்லுநர்கள் முத்திரை குத்தினர்.
தற்போது 25 வயதாகும் கைலியன் எம்பாப்பே ஏற்கனவே 2018-ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். மேலும் மிக இளவயதான எம்பாப்பேயை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தும் அதிரவைத்தது.
தற்போதைய நிலையில் உலகின் அதிக மதிப்பு மிக்க வீரராக இருக்கும் கைலியன் எம்பாப்பே பிரான்சின் புகழ்பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(PSG ) அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் கிளப் ஒப்பந்தம் இந்த ஆண்டோடு முடிவடையவுள்ள நிலையில், அவர் அந்த அணியில் தொடருவாரா அல்லது வேறு அணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டோடு PSG அணியிலிருந்து வெளியேற இருப்பதாக எம்பாப்பே அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ள அவர், “PSG அணிக்காக இந்த சீசனுடன் எனது பயணத்தை முடித்துக் கொள்ள போகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியபடுத்த விரும்புகிறேன். இந்த அணியுடனான எனது ஒப்பந்தத்தை தொடரப்போவதில்லை. PSGஅணியுடனான எனது பயணம் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும்.
ஒரு அணியுடன் நீண்டகாலமாக இருந்துவிட்டு வெளியேறுவது கடினம் என்று எனக்குத் தெரியும். ஆனால் தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு ஒரு புதிய சவால் தேவை என்று நினைக்கிறேன். அதனால் வெளியேறுகிறேன்” என்று கூறியுள்ளார். கைலியன் எம்பாப்பே அடுத்ததாக ஸ்பெயினின் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடவே அதிக வாப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!