Sports
2023-ம் ஆண்டில் இந்தியா சார்பில் அதிக ரன்களை குவித்த வீரர் : கோலியிடமிருந்து சாதனையை பறித்த இளம் வீரர் !
சமீப காலமாக இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக இளம்வீரர் சுப்மான் கில் உருவாகியுள்ளார். கவாஸ்கர்,சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறப்பாக ஒரு மட்டைவீச்சாளரை இந்தியா தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், கோலிக்கு பின்னர் அந்த இடத்துக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்தது.
தற்போதைய நிலையில், கோலிக்கு பின் இந்திய மட்டைவீச்சை வழிநடத்துபவராக சுப்மான் கில் இருப்பார் என பல்வேறு முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற யு-19 போட்டியில் சிறப்பான செயல்பட்ட கில் அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிவந்த கில் கடந்த 2019-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தை தக்கவைத்த கில், மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்தியாவின் தவிர்க்கமுடியாத வீரராக மாறியுள்ளார். அதிலும் கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்கள் குவித்து சாதனை படைத்ததோடு, அதே மாதம் டி20 போட்டியிலும் சதம் விளாசி இளம்வயதில் மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
தற்போது முடிவடைந்த உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், முதல் முறையாக ஐசிசி ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார். இந்த நிலையில், இந்த ஆண்டில் இந்தியா சார்பில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை சுப்மான் கில் படைத்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் 3 விதமான சர்வதேச போட்டிகளில் 52 இன்னிங்ஸ்கள் ஆடியுள்ள கில், அதில் 2,154 ரன்கள் குவித்துள்ளார். அதே நேரம் 36 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 2,048 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சார்பில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியே முதலிடம் பிடித்து வந்த நிலையில், அந்த சாதனையை அவரிடமிருந்து சுப்மான் கில் தட்டி பறித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!