Sports

IPL ஏலத்தை நடத்தும் முதல் பெண் : யார் இந்த மல்லிகா சாகர் ? அவரின் பின்னணி என்ன ?

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.

கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தை முதல் முறையாக மல்லிகா சாகர் (வயது 48) என்பவர் நடத்தி வருகிறார். ஏலம் விடும் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர் விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏலம் நடத்துபவராக பணிபுரிந்தார். ப்ரோ கபடி லீகின் 8 வது சீசக்கான வீரர்கள் ஏலத்தை இவர் நடத்தியது பல்வேறு தரப்பினரிடையே பாராட்டை பெற்றது.

அதனைத் தொடர்ந்து மகளிர் ஐ பிஎல் தொடருக்கான ஏலத்தையும் இவர் நடத்தினார். அந்த வகையில் தற்போது முதல் முறையாக ஆண்கள் ஐபிஎல் தொடரையும் இவர் நடத்தியுள்ளார். மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் கல்லூரி படிப்பை முடித்த 'க்ரிஸ்டி' எனப்படும் முதன்மையான ஏல நிறுவனத்தில் சேர்ந்து, அங்கு பணியைப் பெற்ற இந்தியாவை சேர்ந்த முதல் பெண் ஏலதாரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

ரிச்சர்ட் மேட்லி என்பவர் கடந்த 2018- ஆம் ஆண்டு வரை நடந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தை ரிச்சர்ட் மேட்லி என்பவர் நடத்திய நிலையில், 2018- ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஹ்யூக் எட்மடஸ் என்பவர் ஐபிஎல் ஏலத்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.