Sports
"விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கவில்லை" - சர்ச்சை விவகாரம் குறித்து கங்குலி கூறியது என்ன?
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்கு தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.
கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார். இருந்தாலும், ஒருநாள் அணிக்கு கேப்டனாகத் தொடர கோலி விருப்பம் தெரிவித்திருந்ததால் எந்த மாற்றமும் நிகழாது என்று கருதப்பட்டது. ஆனால், அடுத்ததாக ரோஹித்தை டி-20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக அதிகாரபூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.
அந்த அறிவிப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, “கோலியை டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. வைட் பால் கிரிக்கெட்டின் இரண்டு ஃபார்மட்டுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியான முடிவில்லை என்று கருதியதால், செலக்டர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்று அதுபற்றிக் கூறினார் அப்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.
ஆனால், அதை மறுத்த விராட் கோலி “நான் பதவி விலகுகிறேன் என்று சொன்னபோது யாரும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எல்லோரும் ஏற்றுக்கொள்ளவே செய்தனர். அறிவிப்புக்கு ஒன்றரை மணி நேரம் முன்புதான் அவர்கள் முடிவு தனக்குத் தெரிவிக்கப்பட்டது" என்று கூறினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கவில்லை என கங்குலி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " பலர் நான்தான் விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதாக நினைக்கிறார்கள். ஆனால் நான் அதனை செய்யவில்லை. டி20 போட்டிகளில் கேப்டனாக இருக்க அவர் விரும்பவில்லை என கோலி கூறினார். அதனால், நீங்கள் டி 20 போட்டிகளில் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்றால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவிகளில் இருந்தும் விலகுவது நல்லது என்று அவரிடம் கூறினேன்.
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருவேறு கேப்டன்கள் இருப்பது நல்லதல்ல என்று எனக்கு தோன்றியதாள் அவ்வாறு கூறினேன். ரோஹித் சர்மா ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இதனால் அவரை கேப்டன் பொறுப்பை எடுத்துக்கொள்ளுமாறு நான் தான் சொன்னேன். அதனால் ரோஹித் சர்மா கேப்டன் ஆனதில் எனக்கும் பங்களிப்பு இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக அப்போது என்னை பிசிசிஐஇன் தலைவராக நியமித்தார்கள். அந்த வேலையில் இது ஒரு சிறிய பகுதிதான்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்வதற்கு காரணம் என்ன? : உண்மையை எடுத்துச் சொல்லும் முரசொலி தலையங்கம்!
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!