Sports

எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அதிபர்தான் பொறுப்பு : இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் கருத்து !

கடந்த 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இதில்முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதோடு இந்த தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமானதாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசு தலையிட்டதாக கூறி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்காலிகமான தடை செய்ததாக அறிவித்தது. இது இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை விளையாட்டு துறை அமைச்சரின் செயல் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரின் நடவடிக்கைக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இது குறித்து அவருக்கு தனது கண்டனத்தை பதிவு செய்ததாகவும் இலங்கை மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று, நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, ரோஷனைப் பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா, "இலங்கை அதிபர் ரணில் தன்னை அரசியல்ரீதியாகப் பழிவாங்குகிறார் என்றே தோன்றுகிறது. தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கதான் பொறுப்புக் கூற வேண்டும்" என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்தே அவரின் பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Also Read: 24 வயதில் கேப்டன் பொறுப்பு : குஜராத் டைட்டன்ஸ் கேப்டனாக சுப்மான் கில் நியமனம் - ஹர்திக்கின் நிலை என்ன ?