Sports

வங்கதேச பொதுத்தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டி : அரசியலில் களமிறங்கிய கேப்டன் ஷகீப் அல் ஹசன் !

வங்காளதேசத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷகீப் அல் ஹசன். உலகின் தலைசிறந்த ஆல் ரௌண்டர்களில் ஒருவராக கருதப்படும் இவர் ஐ.பி.எல் தொடரிலும் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாகவும் களமிறங்கினார்.

எனினும் அந்த தொடரில் வங்கதேச அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தையே பிடித்தது. விளையாடும் போது, காயமடைந்த அவர் தற்போது அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், ஷகீப் அல் ஹசன் தற்போது அரசியலில் குதித்துள்ளார்.

வங்காளதேசத்தில் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், அந்த கட்சியில் ஷகீப் அல் ஹசன் இணைந்துள்ளார். மேலும், ஜனவரி 7-ம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் அக்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.

நடைபெறவுள்ள தேர்தலை வங்கதேசத்திலுள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ள நிலையில், ஷகீப் அல் ஹசன் எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் மூன்று தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்துப் பேசிய அவாமி லீக் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் பஹாவுதீன் நசீம், ஷகிப் அல் ஹசன் தனது சொந்த மாவட்டமான மகரா அல்லது தலைநகர் டாக்காவில் போட்டியிடுவார் என நம்புவதாக கூறியுள்ளார். முன்னதாக வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா 2018-ல் ற ஆளுங்கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்கள் : முதல் முறையாக வெளியான பதறவைக்கும் வீடியோ !