Sports
மாமனார் அப்ரிடியின் லாபியால் கேப்டனாக்கப்பட்டாரா ஷாகின் அப்ரிடி ? - ஷாகித் அப்ரிடியின் விளக்கம் என்ன ?
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தனது இறுதி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், கடந்த டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. அதோடு கடந்த உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது.
சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியால் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறமுடியவில்லை. இதன் காரணமாக கேப்டன் பதவியை விட்டு விலக பாபர் அசாம் முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே நேரம் பாகிஸ்தான் வாரியம் சார்பில், பாபர் அசாமை தொடர்ந்து கேப்டன் பதவியில் தொடர கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு உறுப்பினர்கள் மொத்தமாக நீக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார்.
பின்னர் பாகிஸ்தான் அணியின் இயக்குநராக முகமது ஹஃபீஸ் அறிவிக்கப்பட, டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத், டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, ஷாகித் அப்ரிடியின் தலையீடு காரணமாகவே அவரின் மருமகன் ஷாகின் அப்ரிடிக்கு கேப்டன்சி வழங்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில், இது குறித்து ஷாகித் அப்ரிடி விளக்கமளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நான் ஒருபோதும் ஷாகின் அப்ரிடிக்கு கேப்டன்சி கொடுக்க வேண்டும் என்று முன் நிறுத்தியதே இல்லை. பாகிஸ்தான் பிரதமர் கேப்டன் பிரச்சனை குறித்து அவரது பார்வையை கூறியிருந்தார். ஆனால் என்னை பொறுத்தவரை கேப்டன்சி மாற்றம் என்பது தேவையில்லாத ஒன்று.
பாபர் அசாமை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு இன்னொருவரை கொண்டு வர தேவையில்லை. அதேபோல் கேப்டனை மாற்ற வேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் முகமது ரிஸ்வான் தான்.ஏனென்றால் ஷாகின் அப்ரிடியை கேப்டன்சிக்கு தள்ளியிருந்தால், மக்கள் மத்தியில் என்ன பேசுவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் என் மகளை ஷாகின் அப்ரிடிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.ஒருவேளை ஷாகின் அப்ரிடிக்காக நான் லாபி செய்திருந்தால், பிசிபி தலைவரை ஏன் நான் விமர்சிக்க வேண்டும்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
உக்ரைன் பொதுமக்களை படுகொலை செய்யும் ரஷ்யா : உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டு !
-
அமெரிக்காவில் இரண்டே மாதத்தில் கட்டப்பட்ட சர்வதேச மைதானம் : பிரமாண்டமாக நடைபெறும் T20 உலகக்கோப்பை !
-
இலவச பேருந்து திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைகிறதாம் : ச்சே.. மோடிக்கு என்ன ஒரு கவலை!
-
இந்த 3 நாட்கள் ஊட்டிக்கு செல்ல வேண்டாம் : சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய தகவல் இதோ!
-
சூரிய காந்தப் புயல்களின் தரவுகளை சேகரித்த ஆதித்யா விண்கலம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியது என்ன ?