Sports
பாகிஸ்தான் அரையிறுதி செல்ல இதுதான் எளிமையான வழி - வாசிம் அக்ரம் கூறிய ஐடியா என்ன ?
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த தோல்வியோடு பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பின்னர் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராகவும் தோல்வியைத் தழுவியது. ஆனால், அதன் பின்னர் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது.
தொடர்ந்து முக்கியமான நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைபடி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த சூழலில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்து அணி இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை 23.2 ஓவர்களில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நியூஸிலாந்து அணியின் ரன் ரேட் நல்ல நிலையில் உள்ள நிலையில், அதனை தாண்டி பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்து வரும் போட்டியில், இங்கிலாந்து அணியை 277 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது, இலக்கை 2.3 ஓவர்களில் எட்டினால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு செல்ல முடியும். இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல எளிமையான வழி ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து 'ஏ ஸ்போர்ட்ஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், "உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங் செய்து நல்ல இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும். அதன்பின் இங்கிலாந்து அணியை டிரஸ்ஸிங் ரூமில் வைத்து பூட்டி வைத்து, டைம் அவுட் செய்ய வேண்டும்" என்று கிண்டல் செய்துள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!