Sports

"இப்படி ஆகும் என நினைக்கவில்லை.. இந்தியா ஆபத்தான அணியாக மாறிவிட்டது" - சோயப் அக்தர் கருத்து !

ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், அந்த அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் பும்ரா விக்கெட் வீழ்த்திய நிலையில், நான்காவது ஓவரில் சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் நம்பிக்கையை அங்கேயே முடிவுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் தனது அடுத்த ஓவரில் சிராஜ் அடுத்த விக்கெட்டை வீழ்த்த 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. அதன் பின்னரும் தொடர்ந்து இந்திய வீரர்கள் அசத்த இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 51 ரன்கள் இலக்கோடு ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் கில் ஆகியோர் அதிரடி தொடக்கம் தந்தனர். இதனால் இந்திய அணி 6.1 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்று ஆசிய கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்தியா உலகத்தின் எல்லா அணிக்கும் ஆபத்தானதாக மாறியிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இந்தியா மற்ற அணிகளை விட பின்தங்கிய நிலையில், ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றது. ஆனால், அதன் முடிவில் பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லாமல் உலகத்தின் எல்லா அணிக்கும் இந்தியா ஆபத்தானதாக மாறியிருக்கிறது

குறிப்பாக ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும் இறுதிப்போட்டியில் இலங்கையை இப்படி தோற்கடிக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இந்தியா உலகக்கோப்பையில் மிகவும் ஆபத்தான அணியாக இருக்கலாம். ஆனால் நான் எதையும் உறுதியாக சொல்ல மாட்டேன். ஏனென்றால் துணை கண்டத்தின் அணிகள் எல்லாமே ஆபத்தான அணிகள்தான்.இந்தியா தங்களின் நம்பிக்கையை உயர்த்தி உலகக் கோப்பைக்கு செல்கிறது" என்று கூறியுள்ளார்.

Also Read: உலககோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவுடனான தொடர் இந்தியாவுக்கு எதற்கு ? - பாக். வீரர் வாசிம் அக்ரம் கேள்வி !