Sports

இந்த அணிக்கே உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது - இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கணிப்பு !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அணிக்கு கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் திரும்பியதால் இந்திய அணி தற்போது வலுவுடன் காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், இந்த உலகக்கோப்பையில் வெல்லும் அணிகள் குறித்த கணிப்பை முன்னாள் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இந்த ஆண்டு உலகக்கோப்பை இந்திய மண்ணில் நடைபெறுகிறது. இதனால் இந்த உலகக்கோப்பையில் வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

இந்திய அணி சிறந்த அணியாக நிகழ்வதும், அவர்களின் சொந்த மண்ணில் ஆட உள்ளதுமே நாம் இப்படி கூறக் காரணம். சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் இந்திய அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு இருப்பதால், அது இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும். இந்தியாவுக்கு பிறகு இந்த உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிற அணிகளுக்கு வாய்ப்புள்ளது" எனக் கூறியுள்ளார்.

Also Read: முன்னாள் BCCI செயலாளர்களுக்கு அறிவும், பண்பும் இருந்தது.. ஆனால் இப்போது?- இலங்கை முன்னாள் வீரர் விமர்சனம்