Sports

பாலியல் குற்றவாளிக்கு தொடரும் பாஜக அரசின் ஆதரவு.. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அதிரடி தடை.. பின்னணி என்ன ?

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதன்பின்னர் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற திறக்கப்பட்ட நிலையில், அதனை அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிஸார் மல்யுத்த வீரர்களை தடுத்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீசுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர். ஆனால் மல்யுத்த வீரர்களுடன் போராட்டம் நடத்திய விவசாய சங்க தலைவர்களும் அவர்களின் இந்த முடிவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததால் பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டத்தை மல்யுத்த வீரர்கள் கைவிட்டனர்.

இந்த நிலையில், இந்த போராட்டம் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தேர்தல் நடைபெறாத காரணத்தால் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு உலக மல்யுத்தக் கூட்டமைப்பு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் ஜூன் 2023-ம் ஆண்டு நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், பிரிஜ் பூஷன் விவகாரம் காரணமாக எந்த நடவடிக்கையையும் மல்யுத்த சம்மேளனம், மற்றும் அரசு எடுக்கவில்லை.

இது தவிர போராட்டத்தின் போது வீரர்கள் அரசால் மோசமாக நடத்தப்பட்டதையும் உலக மல்யுத்தக் கூட்டமைப்பு விமர்சித்திருந்தது. இதனைத் தொடர்ந்து உலக மல்யுத்தக் கூட்டமைப்பின் காலக்கெடுவையும் தாண்டியும் தேர்தல் நடத்தாததால் தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டி, ஒலிம்பிக்கிற்கான தகுதிப் போட்டிகளில், இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடமுடியாமல், நடுநிலை வீரர்களாக விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Also Read: ”லடாக்கில் ஒரு அங்குல நிலம் கூட இழக்கவில்லை என பொய் சொல்லும் மோடி அரசு”.. ராகுல் காந்தி பதிலடி!