Sports
“பணத்துக்காக சவுதி கிளப் அணியில் இணையவில்லை” : விமர்சனத்துக்கு பிரபல கால்பந்து வீரர் நெய்மர் பதில் !
பிரபல கால்பந்து வீரர் நெய்மர், பிரேசிலை சேர்ந்த சாண்டோஸ் கிளப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த திறமையை கண்ட உலக புகழ்பெற்ற கால்பந்து கிளப்களில் ஒன்றான ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா கிளப் அவரை தங்கள் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்தது.
அந்த அணியில் இணைந்த நெய்மர். அதே அணியில் சக வீரரான மெஸ்ஸியுடன் பல்வேறு சாதனைகள் படைத்தார். மேலும், மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு பின்னர் உலகின் முக்கிய வீரராகவும் மாறினார். அதன்பின்னர் பார்சிலோனா கிளப்பில் இருந்து பிரான்சில் PSG அணி, நெய்மரை 222 பில்லியன் யூரோவுக்கு வாங்கியது. இது கால்பந்து உலகின் மிகப்பெரிய ஒப்பந்தமாக கருதப்பட்டது.
அதன் பின்னர் PSG அணிக்கு ஆடிய நெய்மர் தொடர்ந்து தற்போதுவரை அதே அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதனிடையே அவர் PSG அணியில் இருந்து விலகி வேறு கிளப்பில் இணைவார் எனக் கூறப்பட்டு வந்தது. முதலில் அவர் பார்சிலோனா அணியில் இணைவார் என பேசப்பட்ட நிலையில், அது குறித்த ஒப்பந்தம் எதுவும் இறுதியாகவில்லை.
அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணி நெய்மரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வருடத்துக்கு 649 கோடி ரூபாய்க்கு அல்-ஹிலால் அணி நெய்மரை ஒப்பந்தம் செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் நெய்மர் பணத்துக்காகவே சவுதி அரேபிய கிளப்பில் இணைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு நெய்மர் பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "நான் ஐரோப்பாவில் அதிகம் போட்டிகளில் விளையாடி அங்கு என்னை நிரூபித்து சாதித்துள்ளேன். ஆனால், புதியதொரு இடத்தில் இருக்கும் சவால் மற்றும் வாய்ப்பை நான் எப்படி சமாளிக்கிறேன் என்பதை சோதித்து பார்க்க விரும்பினேன்.
தற்போதைய சூழலில் சவுதி புரோ லீக் தொடரில் தரமான வீரர்கள் விளையாடி வருகின்றனர். பிரேசில் நாட்டு வீரர்களும் சவுதி கிளப் அணிகளுக்காக விளையாடி உள்ளார்கள். அதனால் நானும் இதில் விளையாட வேண்டுமென்ற ஆர்வத்தை பெற்றேன். பணத்துக்காக இந்த அணியில் இணையவில்லை. விளையாட்டில் புதிய வரலாற்றை படைக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். அவர் கூறியது போலவே சவுதி புரோ லீக் தொடரில் ரொனால்டோ, பென்சிமா, மானே, கான்டே, பிர்மினோ, ரியாத் மஹராஜ், ரூபன் டயாஸ், கூளிபாலி போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!