Sports

இதுதான் எனது கடைசி போட்டி.. ஓய்வை அறிவித்த உலக சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்.. ரசிகர்கள் வாழ்த்து !

2007-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் மைக்கேல் வாகன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அறிமுகமானார் ஸ்டூவர்ட் பிராட். அப்போதில் இருந்து இப்போதுவரை இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வீரராக ஸ்டூவர்ட் பிராட் திகழ்ந்து வருகிறார்.

2008-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் இந்திய வீரர் யுவராஜ் சிங் இவரின் பந்தில் 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்து விலாச, இவரின் கதை முடிந்தது என்றே கருதப்பட்டது. ஆனால், அதன்பின்னர் தான் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணியில் மிக சிறந்த வீரராக உருவெடுத்தார். அதிலும் இவரும் ஆண்டர்சனும் வெகு நாட்களாக டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடத்தை ஆக்கிரமித்து இருந்தனர்.

தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஸ்டூவர்ட் பிராட் 600 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இவருக்கு முன் முரளிதரன் (800), ஷேன் வார்ன் (708), ஜேம்ஸ் ஆண்டர்சன் (688) இந்தியாவின் அனில் கும்ப்ளே (619) மட்டுமே இந்த சாதனையை படைத்து இருந்தனர்.

இந்த நிலையில், ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டின் 3வது நாள் முடிவில் ஸ்டூவர்ட் பிராட் இந்த டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி எனவும், இதன் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சில வாரங்களாகவே ஓய்வு குறித்து யோசித்துவந்தேன். எனது கடைசி போட்டி ஆஷஸில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பியதால் இதனை அறிவித்து இருக்கிறேன்.

நேற்று இரவே கேப்டன் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவு குறித்து கூறிவிட்டேன். உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்"என்று கூறியுள்ளார். தற்போது 37 வயதான ஸ்டூவர்ட் பிராட் தற்போதும் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் எட்டாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.