Sports

"திலக் வர்மா இந்திய அணியில் எதற்கு ? அவருக்கு பதில் இவரை எடுத்து இருக்கலாம்" - முன்னாள் வீரர் காட்டம் !

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் குஜராத் அணியை ரஷித் கான் தலைமை தாங்கினார்.இந்த போட்டியில் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய அந்த அணி களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணி விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரின் ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் இறுதி கட்டத்தில் 4 ஓவருக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அடுத்த ஓவரை வீசிய கேப்டன் ரஷீத் கான் அதிரடி வீரர் ரசல், நரைன், ஷர்துல் தாகூரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். இதில் இருந்து கொல்கத்தா அணி தோல்வியை தழுவுவது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டது.

அதோடு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரும் கவனம் பெற்ற ரிங்கு சிங்குவை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.

அதன்பின்னரும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதன் காரணமாக அவர் விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் எனக் கருதப்பட்டது. மேலும், முன்னாள் வீரர்கள் பலரும் அவரை பாராட்டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. அதன் டி20 அணியில், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மும்பை வீரரும் இடதுகை வீரருமான திலக் வர்மாவுக்கு இடம் வழங்கப்பட்டது.

இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா திலக் வர்மாவை காட்டிலும் ரிங்கு சிங்கை அந்த இடத்திற்கு சரியானவர் எனக் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணியில் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் விளையாடுவார்கள் என்பதால் அவர்களுக்கு பிறகு தான் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், பின்வரிசையில் அதிரடியாக ஆடும் வீரர் தேவைப்படுவர். அதற்கு பின் வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் திறன் கொண்ட ரிங்கு சிங்கை அணியில் தேர்வு செய்திருந்தால் அது சரியான தேர்வாக அமைந்திருக்கும். அவரின் அதிரடி ஆட்டம் குறித்து நம் அனைவர்க்கும் தெரியும்" என்று கூறியுள்ளார்.

Also Read: "உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்துவிட்டார்" -Bangladesh அணி கேப்டன் ஓய்வு குறித்து சேர்மன் விளக்கம்!