Sports

"என்னை அணியில் இருந்து நீக்குமாறு தோனியிடம் கூறியதே நான்தான்" -அதிர்ச்சி தகவலை பகிர்ந்த சுரேஷ் ரெய்னா !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.

இதில் சென்னை அணியும் மும்பை அணியும் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதோடு சென்னை அணி இரண்டு முறை தவிர அனைத்து முறையும் பிளே ஆப் சுற்றுக்கு சென்று சாதனை படைத்துள்ளது. இப்படி சென்னை அணியின் சாதனைக்கு முக்கிய காரணமாக சுரேஷ் ரெய்னா இருந்தார். இதனால் அவரை சின்ன தல என்றே ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டு அவர் சென்னை அணியால் மீண்டும் ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தார். இந்த நிலையில், 2021 ஐபிஎல்-ன் போது நடந்த சுவாரசியமான சம்பவத்தை ரெய்னா பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "நாம் 2008-ம் ஆண்டில் இருந்து ஒன்றாக விளையாடுகிறோம். இந்த ஆண்டு கோப்பையை வெல்ல என்ன செய்யலாம் என தோனி என்னிடம் 2021 ஐபிஎல்-ன் போது கேட்டார்.

அதற்கு என்னை ஆடும் லெவனில் இருந்து நீக்கிவிட்டு உத்தப்பா இறுதிப்போட்டி வரை அணியில் இருப்பதை உறுதி செய்யுங்கள் என கூறினேன். மேலும், நானும், உத்தப்பாவும் ஒன்றுதான். அவர்அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து செல்வார் எனக் கூறினேன். ஆனால், அதை தோனி மறுத்து என்னையும், என் அனுமதியோடு உத்தப்பாவையும் விளையாட வைத்தார்” என்று கூறியுள்ளார்.

Also Read: மீண்டும் CSK குடும்பத்தில் எல்லைச்சாமி.. TSK அணியின் கேப்டனாக களமிறங்கும் பாப் டு பிளஸிஸ் !