Sports

"இந்தியாவில் வணங்கப்படும் நபராக தோனி இருக்கிறார்" - ரசிகர் ஆதரவை கண்டு வியந்த சென்னை அணி வீரர் !

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்தனர்.

அதே நேரம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய பின்னர் தோனி உடல்நலம் ஒத்துழைத்தால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நபராகவும், வணங்கப்படுபவராகவும் தோனி இருக்கிறார் என சென்னை அணி வீரர் டேவன் கான்வே கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "இந்த ஐபிஎல் தொடரின்போது நாங்கள் எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் கிடைத்த வரவேற்பு, நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. இதற்கு காரணம் தோனிதான். இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நபராகவும், வணங்கப்படுபவராகவும் தோனி இருக்கிறார். அவர் எங்கு சென்று விளையாடினாலும், தொடர்ந்து வந்து அவருக்கு ரசிகர்கள் தரும் ஆதரவு நம்பமுடியாததாக இருந்தது. இதனால் அனைத்து மைதானமும் எங்கள் சொந்த மைதானம் போலவே இருந்தது" என்று கூறியுள்ளார்.

Also Read: மல்யுத்த வீரர்கள் போராட்டம்.. ஆதரவாக திரளும் விவசாயிகள், பொதுமக்கள்.. ஹரியானா பாஜக அரசுக்கு சிக்கல் !