Sports

"எங்களது உணர்வைக் காயப்படுத்தி விடாதீர்கள்" -தோனிக்கு அறிவுரை வழங்கிய ஹர்பஜன் சிங்.. பின்னணி என்ன ?

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின், கங்குலி-க்கு பிறகு அடுத்து நட்சத்திர வீரராக யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தபோது தனது அமைதியாலும், அதிரடி ஆட்டத்தாலும் அந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தவர்தான் எம்.எஸ்.தோனி. இந்திய அணியில் இப்படி ஒரு வீரரா என பலரும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், சச்சின் அவுட் ஆனால், இந்திய அணி தோற்றுவிடும் என கருதப்பட்ட நிலையையம் மாற்றிக்காட்டினார்.

அதனால் எம்.எஸ்.தோனி களத்திலிருந்தால் அது எவ்வளவு பெரிய ரன்னாக இருந்தாலும் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையைப் இந்திய ரசிகர்களுக்கு விதைத்தார். அதன்பின்னர் இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

இவர் கேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். பெரும்பாலும் இந்த தொடர்தான் அவரின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும் என கருதப்படுவதால் சென்னை அணி விளையாடும் இடங்களில் எல்லாம் தோனிக்கு ஆதரவாக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

அதே நேரம் இந்த ஆண்டு தோனி மிகச்சிறப்பான முறையில் தொடர்ந்து ஆடி வருவதால் அவர் அடுத்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்ற்னர். இந்த நிலையில், நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி எங்களது உணர்வைக் காயப்படுத்தி விடாதீர்கள். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுங்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இந்தத் தொடரில், தோனி அடித்த இமாலய சிக்ஸர்களும் அவர் சேர்க்கும் ஒன்று இரண்டு ரன்களும் ஓய்வு பெற்றாலும் அவர் பழைய தோனிதான் என்பதை காட்டுகிறது. அவர், தன்னுடைய பழைய வேகத்தில் ரன்களை ஓடி எடுக்கவில்லை என்றாலும் ஒரு பேட்டராக தோனி மிகவும் ஆபத்தானவராகவே இருக்கிறார். ஆகையால், நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி எங்களது உணர்வைக் காயப்படுத்தி விடாதீர்கள். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுங்கள்" என்று கூறியுள்ளார்.

Also Read: ”நாங்கள் குற்றவாளிகளைப்போல நடத்தப்படுகிறோம், எங்களை உளவுபார்க்கிறார்கள்” -ஒலிம்பிக் நாயகன் குற்றச்சாட்டு!