Sports
ஏது இந்த மைதானமா ? இதற்கு இந்தியாவுக்கே வராதீர்கள் என்று சொல்லி இருக்கலாம் -பாக். வாரிய தலைவர் காட்டம் !
கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன்பின்னர் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல அரசியல் காரணங்களுக்காக இரு நாடுகள் இடையே எந்த தொடரும் நடைபெறவில்லை. ஐசிசி நடத்தும் தொடரில் மட்டுமே இரு அணிகளும் விளையாடி வருகிறது.
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தும் ஆசிய கோப்பை தொடர் நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று நிலவு வந்தது.
இந்த சூழலில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரை வேறு பொதுவான இடத்திற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் தொடரில் இந்திய அணி பங்கேற்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆசிய கோப்பை தொடரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென ஒருதலைபட்சமாக பிசிசிஐ கருத்து தெரிவித்துள்ளது 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி தொடர்களின் பாகிஸ்தான் பங்கேற்பதை இக்கருத்துகள் பாதிக்கலாம்." என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தனது முடிவில் இந்தியா உறுதியாக இருந்த காரணத்தால் வேறுவழியின்றி பாகிஸ்தான் இறங்கிவந்து இந்தியா விளையாடும் போட்டிகளை பொதுவான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும், இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறினால் அதையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவும் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
அதே நேரம் ஐசிசியின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் என்றும் கூறப்பட்டது. அதே நேரம் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த பாகிஸ்தான் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால், சமீபத்தில் பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகப் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தி "“இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் ஒரே நகரம் குஜராத்தின் அகமதாபாத்தான். அங்கு இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடத்தப்படவுள்ளதாக வந்த செய்தியை பார்த்ததும் இதற்கு மேல் இந்தியாவுக்கு வந்துவிடாதீர்கள் என்று மறைமுகமாக சொல்வதைப் போல தோன்றியது. இந்த போட்டியை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்திருந்தால் நியாயமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!