Sports

"கேப்டனாக இதுதான் அவரின் மிகப்பெரிய பலம்" -தோனி குறித்து முன்னாள் CSK வீரர் ஷேன் வாட்சன் கூறியது என்ன ?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட்டர் ஷேன் வாட்சன். பேட்டிங், பௌலிங் என் இரண்டிலும் அசத்தியவர். 2008 ஐ.பி.எல் தொடரிலிருந்து 2020 ஐ.பி.எல் வரை ஒவ்வொரு தொடரிலும் பங்கேற்று அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முக்கிய அங்கமாக விளங்கியிருக்கிறார்.

முதல் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிகமுக்கியக் காரணமாக விளங்கினார் வாட்சன். அந்த சீசன் ஐ.பி.எல் தொடர் நாயகன் விருது வென்றதும் அவர் தான். அதுமட்டுமல்லாமல், 2013 தொடரிலும் கூட தொடர் நாயகன் விருது வென்றார். 2015 வரை அந்த அணிக்கு விளையாடியவர், 2014-ல் கேப்டனாகவும் செயல்பட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடை செய்யப்பட்ட பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை வாங்கியது. 2017 வரை அந்த அணிக்கு ஆடியவர், சில போட்டிகள் அந்த அணிக்கும் கேப்டனாகவும் செயல்பட்டார். 2018 ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்கியது. சூப்பர் கிங்ஸும் மேட்ச் வின்னராக விளங்கிய வாட்சன், 2018 ஃபைனலில் சதமடித்து அந்த அணி கோப்பை வெல்ல உதவினார்.

இந்த நிலையில், அவர் சென்னை அணி குறித்தும் கேப்டன் தோனி குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் "தோனி உள்ளுணர்வுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பவர். ஒரு வீரராக ஒரு கேப்டனாக நீண்ட நெடிய அனுபவத்தை கொண்டிருக்கிறார். அந்த அனுபவத்தின் வழி குறிப்பிட்ட அந்தத் தருணத்தில் என்ன முடிவை எடுத்தால் சரியாக இருக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். கேப்டனாக இதுதான் தோனியின் மிகப்பெரிய பலம்.

சென்னை அணியும் சீனியர் வீரர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. அவர்களை தன்னம்பிக்கையுடையவர்களாக உணரச் செய்யும் சூழல் இங்கிருக்கிறது. வெறுமனே வார்த்தைகளில் மட்டுமில்லை, செயல்களிலுமே இதை உணர முடியும்.ஒரு சீசனில் 6-7 போட்டிகளாக நான் பெர்ஃபார்ம் செய்யவே இல்லை. ஆனாலும், எனக்குத் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார்கள். நான் எப்படியும் பெர்ஃபார்ம் செய்துவிடுவேன் என நம்பினார்கள். நானும் செய்தேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: இலங்கையில் ஆசிய கோப்பை போட்டிகள் ? விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு.. பலனளிக்காத பாகிஸ்தானின் சமரசம் !