Sports
Instagram மூலம் வெட்டவெளிச்சமான கங்குலி -விராட் கோலி மோதல்.. சேத்தன் சர்மா காரணமா? ரசிகர்கள் அதிர்ச்சி !
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. அந்தத் தொடருக்கு முன்பு திடீரென டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த உலகக் கோப்பையே இந்திய டி-20 அணிக்கு தான் தலைமை வகிக்கும் கடைசித் தொடர் என்று கூறினார். ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தக் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
அவர் தலைமையிலான அணி தொடர்ந்து ஐ.சி.சி தொடர்களை வெற்றி பெறத் தவறியதால் அவர் மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்துகொண்டே இருந்தது. அதனால், இந்த முடிவை எடுத்திருப்பார் என்று கருதப்பட்டது. அந்த முடிவை அறிவித்த சில நாள்களிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐ.பி.எல் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் அந்த சீசனோடு விலகுவதாகக் கூறினார்.
கோலி பதவி விலகியதும் இந்திய டி-20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டார்.இருந்தாலும், ஒருநாள் அணிக்கு கேப்டனாகத் தொடர கோலி விருப்பம் தெரிவித்திருந்ததால் எந்த மாற்றமும் நிகழாது என்று கருதப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை அறிவிக்கும்போது, ரோஹித்தை டி-20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக அதிகாரபூர்வமாக அறிவித்தது பிசிசிஐ.
அந்த அறிவிப்பு பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, “கோலியை டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. வைட் பால் கிரிக்கெட்டின் இரண்டு ஃபார்மட்டுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியான முடிவில்லை என்று கருதியதால், செலக்டர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்” என்று அதுபற்றிக் கூறினார் அப்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.
ஆனால், அதை மறுத்த விராட் கோலி “நான் பதவி விலகுகிறேன் என்று சொன்னபோது யாரும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எல்லோரும் ஏற்றுக்கொள்ளவே செய்தனர். அறிவிப்புக்கு ஒன்றரை மணி நேரம் முன்புதான் அவர்கள் முடிவு தனக்குத் தெரிவிக்கப்பட்டது" என்று கூறினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் சமீபத்தில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்கவில்லை என்றும் இதுவே கோலியின் கேப்டன்ஸி பறிப்புற்கு காரணமாக இருந்தது என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.
அதனைத் தொடர்ந்து டெல்லி பெங்களூரு அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் கங்குலி மற்றும் கோலி கைகுலுக்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குலியை பின் தொடர்ந்துவந்த விராட் கோலி இந்த சர்ச்சையின் காரணமாக கங்குலியை பின் தொடருவதை நிறுத்தியுள்ளார். இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இருக்கும் மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!