Sports

ரோஹித் சர்மா குறித்து நான் அப்படி சொல்லவேயில்லை.. சமூகவலைத்தளங்களில் பரவும் செய்தியை மறுத்த CSK வீரர் !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியோடு தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது போட்டியில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக ஆரம்பித்தாலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சூரியகுமார் யாதவ், காமெரூன் கிரீன், அர்ஷத் கான் ஆகியோரும் வந்தவேகத்தில் திரும்ப ஆட்டம் சென்னை பக்கம் திரும்பியது.

திலக் வர்மா, இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட், ஷூகீன் ஆகியோரின் சிறிய கேமியோ காரணமாக மோசமான நிலையில் இருந்து மும்பை அணி 157-8 என்ற போராடும் இலக்கை எட்டியது. பின்னர் ஆடிய சென்னை அணியில் கான்வே முதல் ஒவரிலேயே டக் அவுட் ஆக அடுத்து வந்த மூத்த வீரர் ரஹானே மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் விளாசிஅசத்தினார்.

வெறும் 19 பந்துகள் அரைசதமடித்த ரஹானே 27 பந்துகளில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ருத்துராஜ் ஷிவம் துபே ஆகியோர் நிதானமாக ஆடினர். 28 ரன்களில் துபே வெளியேற, ராயுடுவும் கெய்க்வாட்டும் கடைசிவரை நின்று அணியை வெற்றிபெற வைத்தனர்.

இந்த போட்டியில்போது சென்னை அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்துவதெல்லாம் எளிது. அவர் ஒன்றும் விராட்டோ, சச்சினோ அல்ல என துஷார் தேஷ்பாண்டே கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவிவந்தது.

இந்த நிலையில் தற்போது நான் அப்படி கூறியதே இல்லை எனவும் பரவும் தகவல் தவறானது எனவும் சென்னை அணி வீரர் துஷார் தேஷ்பாண்டே விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் மீது நான் பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அவர்களை பற்றி இப்படி தரக்குறைவாக நான் ஒரு நாளும் பேசமாட்டேன். பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.

Also Read: KKRvsGT :6,6,6,6,6.. 5 பந்தில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங்.. இறுதி 8 பந்தில் 41 ரன்கள் விளாசி அதிரடி !