Sports

கிரிக்கெட்டில் NO- BALL கொடுத்த நடுவர்.. ஆத்திரத்தில் நடுவரை மட்டையால் அடித்து கொலை செய்த Fielding அணி !

இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு கிடைத்த இடத்தில கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஜென்டில் மேன் விளையாட்டு என அறியப்படும் கிரிக்கெட் போட்டிகளில் அரிதாகவே வன்முறைகள் ஏற்படுகின்றன.

ஆனால், தற்போது ஒடிசா மாநிலத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் நடுவர் குத்தி கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்திலுள்ள சௌத்வார் என்ற பகுதியில் மன்ஹிசலந்தா என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கு இரண்டு தரப்புக்கு இடையே நட்பு ரீதியிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டியில் லக்கி ரவுட் என்ற 22 வயது இளைஞர் நடுவராக இருந்துள்ளார். இந்த போட்டி வெகு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த நிலையில், முக்கிய கட்டத்தில் பந்துவீச்சாளர் வீசிய பந்தை நோ-பால் என நடுவர் லக்கி ரவுட் கூறியுள்ளார். ஆனால் அந்த பந்து சரியான பந்துதான் என பந்துவீச்சாளரும் அவரின் அணி வீரர்களும் கூறியுள்ளனர்.

ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த லக்கி ரவுட் அந்த பந்து நோ-பால் தான் என தொடர்ந்து கூறி வந்துள்ளார். இதனால் அவருக்கும் பந்துவீசிக்கொண்டிருந்த அணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

பந்துவீசிக்கொண்டிருந்த அணியினர் தங்களிடம் இருந்த பேட்டால் நடுவர் லக்கி ரவுட்டை தாக்கியுள்ளனர். அப்போது அங்கிருந்த முதிரஞ்சன் ராவத் என்ற நபர் நடுவர் லக்கி ரவுட்டை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அங்கேயே சுருண்டு விழுந்த லக்கி ரவுட்டை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு லக்கி ரவுட் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முதிரஞ்சன் ராவத் என்ற நபரை உள்ளூர் மக்களின் உதவியோடு கைது செய்தனர். கிரிக்கெட் விளையாட்டில் ஒருவர் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Also Read: சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலில் மரபை மீறி இந்தி தெரிந்த ஓட்டுநர் நியமனம்.. சு.வெங்கடேசன் MP கண்டனம் !