Sports

Test Championship முக்கியம்.. IPL அணிகளுக்கு கட்டுப்பாடு.. வீரர்கள் காயத்தை தவிர்க்க BCCI அதிரடி முடிவு!

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். ஐ.பி.எல் தொடரில் பணம் கொழிப்பதால் அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதனால் இதில் பங்கேற்க சர்வதேச வீரர்கள் அதிகம் காட்டி வருகின்றனர். ஏலத்தில் தங்களை யாரும் எடுக்கமாட்டார்களா என பல்வேறு நாடுகளின் நட்சத்திர வீரர்களும் ஆவலோடு காத்து இருக்கின்றனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது.அதைத் தொடர்ந்து 16 ஆவது ஐ.பி.எல் போட்டி 2023ம் ஆண்டு ஏப்ரல் - மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

மே மாதம் 28ஆம் தேதி ஐபிஎல் தொடர் முடிவடையும் என கூறப்பட்ட நிலையில், அடுத்த 10 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ள நிலையில், அந்த போட்டிக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்களை ஐபிஎல் பிளே ஆப் சுற்றின் போது இங்கிலாந்து திரும்பும் படி ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியும் தகுதிபெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், ஆஸ்திரேலியா பாணியில் வீரர்கள் காயமடைவதை போல இந்திய வீரர்களை காக்க ஐபிஎல் தொடரில் வீரர்கள் பங்கேற்க சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் ஐபிஎல் அணியில் சில போட்டிகளில் ஓய்வெடுக்க வைக்கவும், அவர்களின் உடல்தகுதியை பிசிசிஐ கண்காணிக்க ஐபிஎல் அணிகளோடு ஒரு பிசியோதெரபிஸ்ட்கள் எப்போதும் இருப்பார்கள் என பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் பிசிசிஐ-யின் இதுபோன்ற கட்டுப்பாடுகளுக்கு ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், போட்டி நடைபெறும் காலத்தில் அவர்கள் முழுக்க முழுக்க ஐபிஎல் அணிகளை சேர்ந்தவர்கள்தான், பிசிசிஐ அவர்கள் மேல் எந்த உரிமையும் எடுக்கமுடியாது என ஐபிஎல் அணிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: "நீ உம்ரான் மாலிக்கோ அல்லது சிராஜோ இல்லை" - இளம்வீரரை விமர்சித்த கௌதம் கம்பீர் ! பின்னணி என்ன ?