Sports

"இளம் வீரர்களை கொஞ்சம் பொறுமையாகத்தான் கையாள வேண்டும்" -அணி தோல்வி குறித்து ராகுல் டிராவிட் கருத்து !

இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தத் தொடரை 1-1 என சமன் செய்தது இலங்கை. தஷுன் ஷனகாவின் அதிரடி பேட்டிங்கும், ஆர்ஷ்தீப் சிங்கின் சரமாரியான நோ பால்களும் இந்தப் போட்டியின் முக்கிய பேசுபொருளாக இருந்தன. இலங்கை இன்னிங்ஸில், 2 ஓவர்கள் மட்டுமே வீசிய ஆர்ஷ்தீப், 5 நோ பால்கள் வீசியிருந்தார்.

கடந்த ஆண்டு, இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வரவாகக் கருதப்பட்டவர் ஆர்ஷ்தீப் சிங். ஆனால், இந்த சீசனில் அவர் ஆடிய முதல் போட்டியில் ரொம்பவே தடுமாறினார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தவர், மீண்டும் அணிக்குத் திரும்பியபோது தடுமாறினார். புனேவில் நடந்த இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் 5 நோ பால்கள் வீசினார் அவர். அதில் ஹாட்ரிக் நோ பால்களும் அடக்கம். அதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்திய அணியின் தோல்வியைக் குறித்து பேசிய அணி தலைவர் ஹர்திக் பாண்டியா "பேட்டிங்கிலும் சரி, பௌலிங்கிலும் சரி, பவர்பிளே எங்களுக்கு சரியாக அமையவில்லை. நாங்கள் அடிப்படையிலேயே சில தவறுகள் செய்துவிட்டோம். இந்த பெரிய அரங்கில் அப்படியான தவறுகள் செய்யக்கூடாது. எங்களால் கட்டுப்படுத்த முடிந்த விஷயங்கள் மீது இனி கவனம் செலுத்தவேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "தற்போதைய இந்திய அணியில் நிறைய இளம் வீரர்கள் ஆடி வருகிறார்கள். கொஞ்சம் பொறுமையாகத்தான் அவர்களை கையாள வேண்டும். அவர்களுக்கு இதே மாதிரியான கடினமான போட்டிகள் வாய்க்கத்தான் செய்யும்.அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்து உறுதுணையாக இருப்போம்" என்று கூறியுள்ளார்.

Also Read: காதலியால் ரொனால்டோவுக்கு வந்த சோகம்.. சவுதி அரேபிய தண்டனையில் இருந்து தப்புவாரா கால்பந்து நட்சத்திரம் ?