Sports

"ரொனால்டோவின் ஆணவத்தால் தான் போர்ச்சுகல் அணி தோற்றது" -உலகக்கோப்பை வென்ற முன்னாள் வீரர் விமர்சனம் !

கத்தாரில் நடைபெற்ற வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் ரொனால்டோ அந்த அணி பயிற்சியாளரால் நடத்தப்பட்ட விதம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், ரொனால்டோ மீதும் கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.உலகக்கோப்பையின் இறுதி லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி தென்கொரியாவை சந்தித்தது. இந்த போட்டியில் ரொனால்டோவின் செயல்பாடு மோசமாக அமைந்தது. எதிரணி வெற்றிபெற ரொனால்டோவே முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இதற்கு அடுத்த நாக் அவுட் சுற்று போட்டியான ரவுண்டு ஆப்ஃ 16 சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியும் ஸ்சுவிட்சர்லாந்து அணியும் மோதின. இதன் ஆரம்பத்திலேயே உலக ரசிகர்களுக்கும் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜாம்பவான் வீரரும், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் லெவனில் இல்லாமல் வெளியே அமரவைக்கப்பட்டார்.

அதிலும் அவருக்கு பதிலாக 21 வயது இளம்வீரர் ரேமோஸ் களமிறக்கப்பட்டார். இத்தனைக்கும் லீக் போட்டிகள் அனைத்திலும் ரொனால்டோவே ஆடும் லெவனில் இடம்பிடித்திருந்த நிலையில், முக்கிய நாக் அவுட் போட்டியில் அவர் உக்காரவைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் போர்ச்சுகல் அணி தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் இருந்தே அந்த அணி அசத்தலாக விளையாடியது. அதிலும் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட இளம்வீரர் ரேமோஸ் களத்தில் சிறப்பாக செயல்பட்டு ஹட் ட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

அதன்பின்னர் காலிறுதியில் மொரோக்கோ அணிக்கு எதிரான போட்டியிலும் ரொனால்டோ வெளியே அமரவைக்கப்பட்டார். பின்னர் இரண்டாம் பாதியில் களமிறக்கப்பட்டாலும் அவரால் தனது அணியின் தோல்வியை தவிர்க்கமுடியவில்லை. இதனால் உலககோப்பை தொடரின் இருந்து அழுதுகொண்டே வெளியேறினார்

ஏற்கனவே கிளப் போட்டிகளில் ரொனால்டோ புறக்கணிக்கப்பட்ட நிலையில், தற்போது தேசிய அணியிலும் அவருக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவரை ஜெர்மனி அணிக்கு உலகக்கோப்பை பெற்றுக்கொடுத்த முன்னாள் வீரரும் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் 'பாலன் டி ஓர்' விருதுபெற்றவருமான லோதர் மத்தாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "ரொனால்டோ ஆணவத்தினால் தன்னையும், அணியையும் இந்த உலககோப்பை தொடரில் சேதப்படுத்தினார். அவர் ஒரு சிறந்த வீரர் மற்றும் ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதில் வல்லவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இப்போது அவர் தனது அணியை சேதப்படுத்திவிட்டார். அவரால் அணியில் ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்று நான் நினைப்பதே கடினமாக உள்ளது. ரொனால்டோவை நினைத்து வருந்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: பிரான்ஸ் நட்சத்திர வீரர் எம்பாப்பேயை மோசமாக கிண்டல் செய்த அர்ஜென்டினா GOAL KEEPER.. ரசிகர்கள் கண்டனம் !