Sports
தோற்றும் உருகுவே அணியை 12 ஆண்டுகளுக்கு பின்னர் பழிவாங்கிய கானா ? கதறி அழுத வில்லன்.. நடந்தது என்ன ?
உலகமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் போட்டிகள் நேற்றொரு முடிவுக்கு வந்த நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற வாழ்வா சாவா போட்டியில் உருகுவே அணி கானா அணியை எதிர்கொண்டது. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இந்த போட்டி கருதப்பட்டது. அதிலும் இந்த குழு அறிவிக்கப்பட்ட அந்த நொடியில் இருந்து கானா ரசிகர்கள் உருகுவேவுடனான போட்டியை தேசிய பிரச்சனையாகவே கருதினர்.
கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் கானா அணி காலிறுதிக்கு முன்னேறி காலிறுதியில் உருகுவே அணியை சந்தித்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்த நிலையில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு ஆட்டம் முடிய சிறிதுநேரமே இருந்த நிலையில், கானா அணி கோலை நோக்கி பந்தை அடிக்க அதனை உருகுவே வீரர் சுவாரஸ் கைகளால் அதனை தட்டிவிட்டார். அதை கைகளால் அவர் தட்டாமல் இருந்திருந்தால் நிச்சயம் அது கோலாக மாறியிருக்கும்.
இதனால் அவருக்கு சிகப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேறிய நிலையில், கானா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதனை கானா அணி கோல் அடிக்க தவறியது. இதனை பெஞ்சில் இருந்த சுவாரஸ் உற்சாகமாக கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி ஷாட் அவுட்டில் உருகுவே அணி 4-2 என்ற கணக்கில் கானா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த தோல்வியை கானா அணி அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கானா அணியின் பயிற்சியாளர் உருகுவே ஏமாற்றிவிட்டதாகவும் கானா அணிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் கூறினார். அதோட சுவாரெஸை குறிப்பிட்டு ‘வில்லன்’ எனவும் விமர்சித்தார். கானா நாட்டிலும் இது தேசிய பிரச்சனையாக பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் கானா வென்றிருந்தால் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்ரிக்க அணி என்ற பெருமையை பெற்றிருக்கும். மேலும் சுவாரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்ற உருகுவே -கானா மோதலை பழிவாங்கும் படலமாகவே கானா ரசிகர்கள் பார்த்தனர். அந்நாட்டில் இதுகுறித்த விவாதமும் பெரியளவில் எழுந்தது. எனினும் இந்த போட்டியில் உருகுவே அணி கானாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. ஆனாலும் அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
போர்த்துக்கல் அணியை வீழ்த்திய தென்கொரியா அதிக கோல் அடித்த கணக்கில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.இந்த தோல்விக்கு பின்னர் உருகுவே வீரர் சுவாரஸ் பெஞ்சில் அமர்ந்து கதறி அழுத காட்சிகள் இணையத்தில் வெளியானது. அதனைக் குறிப்பிட்டு சுவாரஸையும் உருகுவே அணியையும் பழிவாங்கிவிட்டதாக கானா ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!