Sports

#FIFA2022 :மைதானத்தில் பீருக்கு தடை.. கோக்ககோலா ஸ்டிக்கரை ஒட்டி நூதனமாக பீர் கடத்திய முரட்டு ரசிகர் !

கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நேற்று இரவு கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கியது. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு (FIFA)கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது.

உலகக்கோப்பைக்காக பல்வேறு நாட்டின் ரசிகர்களும் கத்தார் வந்துள்ள நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மதுபானம் அவர்களின் தினசரி செயல்பாட்டில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஆனால் தீவிர இஸ்லாமிய நாடான கத்தாரில் மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் மைதானத்தில் மட்டும் மது இல்லாத பீர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கத்தார் நாட்டுக்குள் மதுபானங்களை சிலர் கடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், மைதானத்தில் கோக்ககோலா பாட்டிலில் சிலர் எடுத்து வருவதாக கத்தார் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் ரசிகர்களை சோதனை செய்ததில் அதில் ஒருவர் பீர் பாட்டிலில் கோக்ககோலா ஸ்டிக்கரை ஒட்டி எடுத்துவந்தது தெரியவந்தது.இது தொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், பலரும் அந்த ரசிகருக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தனர். அந்த ரசிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: உலகசாதனை படைத்த தமிழ்நாடு வீரரிடம் Spark இல்லையா? ஜெகதீசனை வைத்து தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள் !