Sports

#FIFA2022 : 3 மணிநேரம் மது அருந்தாவிட்டால் இறந்துபோய் விடுவீர்களா ? - FIFA தலைவர் காட்டம் !

கிட்டத்தட்ட உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று இரவு கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கவுள்ளது. ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த தொடர் பல்வேறு சர்ச்சைகளை சுமந்து வருகிறது. போட்டியை நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பான பீபாவுக்கு (FIFA)கத்தார் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தற்போது வரை கால்பந்து உலகை உலுக்கி வருகிறது.

மேலும், மதுபானத்துக்கு தடை, LGBTQ சமூகத்துக்கு அனுமதி மறுப்பு, மனிதஉரிமை விவகாரம், தீவிர ஆடை கட்டுப்பாடு ஆகியவற்றால் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தாரில் நடக்கும் உலகக்கோப்பை தொடரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த உலகக்கோப்பையை கத்தாரில் நடத்தியே இருக்கக்கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இது போன்ற விமர்சனங்களுக்கு அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின்(FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், "கடந்த 3,000 ஆண்டுகளாக உலகநாடுகளுக்கு ஐரோப்பியர்கள் செய்தவற்றுக்கு அடுத்த 3,000 ஆண்டுகளுக்கு அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும். ஆனால் அவர்கள் குறைசொல்லி வருகிறார்கள்.

ஒரு நாட்டின் கலாச்சாரத்துக்கு ஏற்ப விளையாட்டு அரங்கங்களில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை. 3 மணிநேரத்திற்கு மது அருந்தாவிட்டால் ஏதும் ஆகாது. அவர்கள் உயிர் பிழைக்க முடியும்" என காட்டமாக விமர்சித்துள்ளார். அவரின் இந்த கருத்து மேலை நாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நடு கடலில் கவிழ்ந்த கப்பல்.. வியட்நாமில் தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதிகள்.. பின்னணி என்ன ?