Sports

"உலகக்கோப்பையில் அணியின் தோல்விக்கு இதுவே காரணம்" -வித்தியாசமாக கருத்து கூறிய முன்னாள் வீரர் !

ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி உலக சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் தொடங்கும் முன்னர் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளே வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிலும் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் என்னும் அந்தஸ்துடன் ஆஸ்திரேலிய அணி இந்த உலகக்கோப்பையில் களமிறங்கியது. இதன் காரணமாக அந்த அணிக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக குரூப் சுற்றோடு இந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி நடையை கட்டியது. ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியா போன்ற நாடுகளும் கோப்பையை வெல்லாத காரணத்தால் அந்த நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தவறான அட்டவணை காரணமாக உலககோப்பையில் ஆஸ்திரேலிய அணி தோற்றதாக அந்நாட்டு முன்னாள் வீரர் இயன் ஹீலி கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அவர்,டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் அட்டவணை மிகவும் தவறாக அமைந்துவிட்டது. டவுன்ஸ்வில்-லில் மூன்று ஆட்டங்கள் விளையாடினார்கள். பிறகு கேர்ன்ஸ் நகரில் மூன்று ஆட்டங்கள். பிறகு இந்தியாவில் ஒரு வாரம் விளையாடினார்கள். பிறகு பெர்த், கேன்பராவில் விளையாடி கிழக்குப் பக்கம் வந்தார்கள்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னதாக வீரர்கள் இத்தனை ஆட்டங்களிலா விளையாடுவார்கள்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது அட்டவணையைச் சரியாகத் திட்டமிட வேண்டும். இதுபோல அடுத்தமுறையும் ஆஸ்திரேலிய வீரர்களைச் சோர்வாக்க வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

Also Read: ”இந்த வீரரை இவ்வளவு பில்டப் கொடுத்து அழித்துவிடாதீர்கள்”- இந்திய வீரர் குறித்து எச்சரித்த ஜாண்டி ரோட்ஸ் !