Sports

“சிறப்பாக விளையாடியும் T20 உலகக் கோப்பை தொடரை தவறவிட்ட சஞ்சு சாம்சன்” : கங்குலி சொல்லும் காரணம் சரிதானா ?

2022 டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடும் இந்திய அணியின் ஸ்குவாடில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. அதனால் இந்திய அணியில் அவருடைய எதிர்காலம் என்ன என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் இன்னும் அவர் இந்திய அணியின் திட்டத்தில் இருக்கிறார் என்பதை சமீபத்தில் தெரிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி. அடுத்து வரவிருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாம்சன் இடம் பெறுவார் என்று கூறியிருக்கிறார் கங்குலி.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் சர்வதேச டி20 போட்டிக்கு முன்பு பேசிய கங்குலி, "சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக விளையாடி விருகிறார். இந்திய அணிக்காக அவர் சிறப்பாக விளையாடினாலும் துருதிருஷ்டவசமாக உலகக் கோப்பையை தவறவிட்டிருக்கிறார்.

ஆனால் அவர் இந்திய அணியின் திட்டங்களில் நிச்சயம் இருக்கிறார். அடுத்த நடக்கப்போகும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐ.பி.எல் தொடரில் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்" என்று பேசினார் கங்குலி.

புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் சர்வதேச T20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியை சிறப்பான பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்தியது இந்தியா.

20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்க அணி. அதை 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது இந்தியா. ஓப்பனர் கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் இருவரும் ஆட்டமிழக்காமல் அரை சதம் கடந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா "இந்த ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. இப்படியொரு போட்டியில் விளையாடும்போது பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் அணி என்ன செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இப்படி ஒரு ஆட்டத்தை விளையாடியது நன்றாக இருந்தது.

ஆடுகளத்தில் இருந்த புற்களைப் பார்த்த போது பௌலர்களுக்கு அது உதவிகரமாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் 20 ஓவர்களும் அது சாதகமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. அது ஈரமாகவே இருந்தது. அணிகளுக்குமே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் சிறப்பாக விளையாடிய அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியை நாங்கள் சிறப்பாகத் தொடங்கினோம். மிக விரைவாக 5 விக்கெட்டுகளை எடுத்துவிட்டோம். அதுவே ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது" என்று கூறினார் ரோஹித்.

Also Read: ரிக்கி பான்டிங் சொன்னதை நிருபித்து காட்டிய சூர்யகுமார் யாதவ்: மேட்ச் வின்னராக தடம் பதிப்பாரா சூர்யகுமார்?