Sports

ஆசிய கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? வெளிவந்த ரசிகர்களின் கருத்து !

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான், இலங்கை அணிகள் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் என இரண்டு அணிகளுக்கு எதிராகவும் தோல்வி அடைந்தது. அதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த தொடரில் இந்திய அணிக்கு தோல்விக்கு காரணமாக அணி தேர்வு இருந்தது. ஜடேஜா காயமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக யாரை களம் இறக்குவது என்பதில் இந்திய அணி பெரும் தவறு செய்தது. ஜடேஜாவுக்கு மாற்றாக இறக்கப்பட்ட தீபக் ஹூடாவை தினேஷ் கார்த்திக் இடத்தில பினிஷர் பணியை செய்ய வைத்தது இந்திய அணி.

முதல் 4 வரிசையில் இறங்கும் தீபக் ஹூடாவால் பினிஷர் பணியை சரியாக செய்யமுடியவில்லை. மேலும் அவருக்கு பந்துவீசவும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதோடு தினேஷ் கார்த்திக்கு பதிலாக இறங்கிய ரிஷப் பந்த்தும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், மலையாள பிரபல நாளிதழ் ஒன்று இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்களிடம் கருத்து கணிப்பை நடத்தியது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், இந்திய அணியின் மோசமான அணித் தேர்வே முக்கியக் காரணம் என்று 66 சதவீத ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 26.37 சதவீதம் பேர் அதீத நம்பிக்கை தான் தோல்விஅடைய காரணம் எனவும் 3.79 சதவீதம் பேர் அதிக அளவில் இந்திய அணி போட்டிகளில் பங்கேற்பதையும், 2.93 சதவீதம் பேர் வயதான வீரர்கள் இருப்பதாகவும் தோல்விக்கு காரணமாக கூறி உள்ளனர்.

இதுதவிர 45.30 சதவீதம் பேர் தினேஷ் கார்த்திக்கை சரியாக பயன்படுத்தவில்லை என்றும், 19 சதவீதம் பேர் ரவிச்சந்திரன் அஷ்வினை சிறப்பாக பயன்படுத்தவேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதேபோல பந்துவீச்சு குறித்த கேள்விக்கு 34.68 சதவீதம் பேர் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறியுள்ளனர்.

Also Read: "கலைஞர் போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றுகிறார்" - அதிமுக MLA புகழாரம் !