Sports

களத்தில் ஆக்ரோஷ சண்டை.. மோதிக்கொண்ட இருநாட்டு ரசிகர்கள்.. அதிரடியாக அபராதம் விதித்த ICC !

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றுக்குள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நுழைந்துள்ளது. தற்போது சூப்பர் 4 சுற்றுகள் இறுதி நிலையை எட்டியுள்ளன.

இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த நிலையில், அடுத்த போட்டியில் இலங்கையிடமும் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் முக்கியத்துவம் பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றால் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும் என்பதால் அதிக முக்கியத்துவம் கொண்ட ஆட்டமாக இதில் மாறியது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹ்மானுல்லா குர்பாஸ் 17 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.. அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் மட்டுமே குவித்தது.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழக்க, இறுதிக்கட்டத்தில் பரபரப்பான நிலையை எட்டியது. கடைசி 2 ஓவருக்கு 21 ரன்கள் தேவைபட்ட நிலையில், ஃபரீத் அகமது வீசிய 2ஆவது பந்தில் ஹரிஸ் ரவூப் ஆட்டமிழந்தார். 4ஆவது பந்தில் ஆசிப் அலி ஒரு சிக்ஸர் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் விக்கெட்டை கொண்டாடிய போது, பவுலர் ஃபரீத் அகமது ஆசிப் அலி பக்கத்தில் வந்து கையை உயர்த்தி கத்தினார்.. இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலி அவரை கையால் சற்று தள்ளி விட்டு பேட்டால் ஓங்கினார். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் இறுதி ஓவரில் கைவசம் ஒரு விக்கெட் இருக்க, வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான நேரத்தில் பாரூக்கி வீசிய கடைசி ஓவரில் முதல் 2 பந்தையும் புல்டாஸாக வீச இளம்வீரர் நசீம் ஷா தொடர்ச்சியாக 2 சிக்ஸர் அடித்து பாகிஸ்தானை வெற்றிபெற வைத்தார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், பார்வையாளர்களாக அமர்ந்திருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பயங்கரமாக மோதிக்கொண்டனர். அரங்கில் இருந்த சேர்களும் ஒருவர் மேல் ஒருவர் வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் ஆசிப் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஃபரீத் அகமது ஆகியோர் ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியின் போது களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக அவர்களது போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், அலி வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.6 ஐ மீறியுள்ளார். ஒரு சர்வதேச போட்டியின் போது ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு எந்த நபருடனும் (பார்வையாளர் உட்பட) பொருத்தமற்ற உடல் தொடர்பு தொடர்பான பிரிவு 2.1.12 ஐ ஃபரீத் மீறியது கண்டறியப்பட்டது. வீரர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் முன்மொழியப்பட்ட தடைகளை ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை.. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளருக்கு 704 நாட்களுக்கு பிறகு ஜாமீன் !