Sports

“நிம்மதியுடன் இருப்பது நல்லதுதானே..” : ஓய்வு பெறுகிறாரா டென்னிஸ் ஜாம்பவான் ? - ரசிகர்கள் அதிர்ச்சி!

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீரர் என்று கருதப்படுபவர் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர். தற்போதைய காலத்தை விட அதிக போட்டி நிறைந்ததாக காணப்பட்ட இரண்டாயிரமாவது ஆண்டுகளில் அப்போதிய உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்தி பெரும் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரரான ரோஜர் பெடரரின் சாதனை தற்போதுதான் உடைக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக பெரும்பாலான தொடர்களில் இவர் விளையாடத நிலையில் கூட அதிகம் சம்பாதிக்கும் டென்னிஸ் வீரராக ரோஜர் பெடரர் தான் தற்போதும் விளங்குகிறார்.

களிமண் தரையில் ஸ்பெயினின் ரபேல் நடால் நாயகனாக திகழ்வதுபோல புல்தரையில் தனி ராஜ்யத்தையே ரோஜர் பெடரர் நடத்திவந்தார். கிராண்ட்ஸ்லாம்எ தொடர்களின் உச்சமாக கருதப்படும் விம்பிள்டன் தொடரை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர்தான்.

இந்தாண்டு விம்பிள்டன் தொடரில் ரோஜர் பெடரர் விளையாடுவர் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், காயம் காரணமாக தொடரில் பங்கேற்பதில் இருந்து விலகினார். செம்டம்பர் மாதம் அவர் மீண்டும் டென்னிஸ் களத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் ஓய்வு பெறப்போகிறாரோ என்ற அச்சம் தற்போது அவரது ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

தற்போது 40 வயதாகும் ரோஜர் பெடரர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய அவர், நான் வெற்றியை விரும்புபவன், ஆனால் இனியும் சவாலாக ஆட முடியவில்லை எனில் நிறுத்துவது சிறந்தது. எனக்கு டென்னிஸ் தேவை என்று நான் நினைக்கவில்லை. சின்ன சின்ன விஷயங்களே எனக்கு போதுமானது" எனக் கூறியுள்ளார்.

மேலும் "1998 முதல் ஒருமுறை கூட விம்பிள்டன் தொடரை தவற விட்டதில்லை. நான் நீண்ட காலம் வீட்டை விட்டு பிரிந்து இருந்து விட்டேன் ஆகவே கொஞ்சம் நிம்மதியுடன் இருப்பது நல்லதுதானே! விளையாட்டை மிஸ் செய்கிறேன், அது உண்மைதான், ஆனால் அதே வேளையில் வீட்டில் சாதாரணமாக இருப்பதும் நன்றாகத்தான் உள்ளது" எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் ஓய்வு பெறப்போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read: ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட இலங்கை அணி.. கண்ணீரில் மூழ்கியுள்ள தேசத்தில் ஒரு வெற்றிப்புன்னகை!