Sports

இது முதல் முறையல்ல.. மீண்டும் உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை வென்ற 16 வயது சிறுவன் பிரக்யானந்தா!

ஆன்லைன் வழியாக ரேபிட் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் உலகில் முழுவதும் இருந்து வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் இன்று நடந்த 5வது சுற்றில் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா தனது 40 காய் நகர்த்தலின்போது கார்ல்சனை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த பிப்ரவரியில் ஆன்லைன் வழியாக நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று மாதங்களில் 2 முறை உலக சாம்பியனை 16 வயது சிறுவன் தோற்கடித்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து பலரும் தமிழ்நாட்டுச் சிறுவன் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உலக ஜாம்பவானையே தோற்கடித்த சிறுவன் பிரக்ஞானந்தாவின் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம். சென்னையைச் சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. சிறு வயதில் தனது அக்கா செஸ் பயிற்சிக்குச் செல்வதைப் பார்த்து பிரக்ஞானந்தாவும் சென்றுள்ளார். இப்படிதான் இவரின் செஸ் வாழ்க்கை துவங்கியுள்ளது.

தனது 5வது வயதில் முதல் செஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். பின்னர் 7 வயதில் எட்டு வயதுக்குப்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றார். தற்போது 16வது உலக செஸ் ஜாம்பவானை வீழ்த்தி அசத்தியுள்ளார் பிரக்ஞானந்தா. விஸ்வநாதன் ஆனந்த் பல முறை கார்ல்சனே எதிர்கொண்டு தோல்வி கண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பெங்களூரு அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு இந்த அணியின் கையில்தான்.. இன்று MI vs DC போட்டி!