Sports

பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் IPL 2022 - ரசிகர்கள் ஏமாற்றம் : BCCI வெளியிட்ட முக்கிய தகவல் என்ன ?

கொரோனா பரவலுக்கு இடையே நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்று பிசிசிஐ திட்டமிட்டு வருகின்றது. அதனடிப்படையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மும்பை மற்றும் புனே ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறும் என்றும், கொரோனோ பரவல் காரணமாக வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலன் கருதி ரசிகர்கள் அனுமதியின்றி போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பி.சி.சிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மும்பை வான்கடே மைதானம் மற்றும் பாட்டீல் மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் புனே மைதானத்திலும் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பிசிசிஐ சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பரவல் குறையாமல் ஐ.பி,எல் போட்டியை நடத்துவதற்கான சூழல் இல்லாத நிலை ஏற்பட்டால், போட்டியை தென்னாப்பிரிக்காவில் நடத்துவது தொடர்பாகவும் பி.சி.சிஐ ஆலோசித்ததாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் மற்றும் புதிதாக உள்ள இரண்டு அணிகள் என மொத்தம் 10 அணிகளுக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், 896 இந்திய வீரர்கள் மற்றும் 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1214 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த வீரர்கள் ஏலத்தில் ஏற்கனவே ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணிக்கான வீரர்களை தக்கவைத்துள்ள நிலையில், எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் தன்வசப்படுத்த இருக்கின்றது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வலுவான அணி... ஆனால் தொடர்ந்து ஏமாற்றம் - இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? #IndvSA