Sports

ஒருபுறம் குண்டுவெடிப்பு.. மறுபுறம் அச்சமின்றி சாதித்துக் காட்டிய பாரா பேட்மிண்டன் வீரர்கள்!

உகாண்டாவில் சர்வதேச பாரா பேட்மிண்டன்-2021 போட்டிகள் நடந்தது. இதில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 56 வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து 9 வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் இந்தியா 45 பதக்கங்கள் வென்று அசத்தியது. இதில் குறிப்பாகத் தமிழ்நாட்டு வீரர்கள் 12 பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் ஈரோட்டைச் சேர்ந்த ருத்திக் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதுபோல் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் பெற்றனர்.

உகாண்டாவில் பதக்கங்களைப் பெற்று விட்டு வீரர், வீராங்கனைகள் விமானத்தில் சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பட்டு துறை, மேம்பாட்டு ஆணையம் சார்பில் வீரர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் செல்போனில் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து வீரர் பத்ரி நாராயணன் கூறுகையில், உகாண்டாவில் நடந்த பாரா பேட்மிண்டன் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டு 12 பதக்கங்களைப் பெற்றுத் திரும்பி உள்ளோம். உகாண்டா சென்றிருந்த போது தங்கி இருந்த விடுதி அருகே பயிற்சிக்குச் சென்ற போது அதிபயங்கரமாக 2 குண்டுகள் வெடித்தது.

அப்போது உடனே விளையாட்டுத் துறை அமைச்சர் தொடர்பு கொண்டு எங்களிடம் நிலைமைகளைக் கேட்டறிந்தார். மேலும் உகாண்டா தமிழ் சங்கம் நிர்வாகிகள் வீரர்களைக் கவனித்துக் கொண்டனர். எங்களுக்கு ராணுவ பாதுகாப்பு தரப்பட்டது. குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பற்றி கவலைப்படாமல் பயிற்சி செய்தோம்.

இந்தப் போட்டியில் தமிழ்நாட்டிற்கு முதன்முறையாக 12 பதக்கங்கள் வென்றுள்ளோம். இந்தியாவிற்கு 45 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பெண்கள் முதல் முறையாக பதக்கங்களைப் வென்றுள்ளனர். விரைவில் யூத் பாரா ஏசியன் போட்டிகளில் சந்தியா, ருத்திக், கரன் ஆகிய தேர்வு ஆகி உள்ளார். உற்காக வரவேற்பு தந்த தமிழ்நாட்டு அரசு அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Also Read: உகாண்டாவில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த விடுதி அருகே குண்டுவெடிப்பு.. வீரர்களின் தற்போதைய நிலை என்ன?