Sports
பாராலிம்பிக்ஸ்: மீண்டும் தங்கம் வெல்வாரா தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு??
பாராலிம்பிக்ஸ் போட்டிகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்திய வீரர்/வீராங்கனைகள் தொடர்ச்சியாக பதக்கங்களை வென்று கொடுத்து கொண்டிருக்கின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா 5 பதக்கங்களை வென்றிருந்தது. அதில் 2 தங்கங்களும் அடக்கம். மொத்தமாக இந்தியா 7 பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் T63 உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு களமிறங்க இருக்கிறார்.
மாரியப்பன் தங்கவேலு கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கிலும் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதில், 1.89 மீட்டருக்கு உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார். அந்த பாராலிம்பிக்கில் இந்தியா இரண்டு தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. அதில் மாரியப்பன் வென்று கொடுத்து தங்கமும் ஒன்று. உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தினார். பாராலிம்பிக் அரங்கில் இந்தியாவின் தேசிய கீதம் ஒலிக்க காரணமாக இருந்திருந்தார்.
மாரியப்பன் தங்கவேலு சேலத்தில் எளிய பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சிறுவயதிலேயே பொறுப்பற்ற முறையில் குடும்பத்தை விட்டு சென்று விட, மாரியப்பனின் தாயே காய்கறி வியாபாரம் செய்து பிள்ளைகளை ஆளாக்கியிருக்கிறார். சிறுவயதில் நிகழ்ந்த ஒரு பேருந்து விபத்தில் மாரியப்பனின் காலில் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளியில் வாலிபால் போட்டியில் ஆர்வமாக பங்கேற்க விரும்பிய மாரியப்பனுக்கு இந்த உடல் பாதிப்புகள் தடையாக வந்து நின்றது.
அப்போது, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களின் ஆலோசனைப்படி உயரம் தாண்டுதலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டவர் சத்யநாராயணா எனும் பிரபல தடகள பயிற்சியாளரின் கண்ணில் படுகிறார். மாரியப்பனின் திறமையை கண்டு ஆச்சர்யமுற்ற சத்யநாராயணா இலவசமாக பயிற்சியளிக்க முன்வருகிறார். அங்கிருந்துதான் எல்லாமே தொடங்கியது. மாரியப்பனுக்கு உயர்தர பயிற்சிகள் கிடைக்க தொடங்கியது.
2016 பாராலிம்பிக்ஸிற்கு செல்வதற்கு முன்பாகபே உலகளவிலான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார். எல்லாரும் எதிர்பார்த்ததை போல ரியோவிலும் சிறப்பாக செயல்பட்டு 1.89 மீட்டருக்கு உயரம் தாண்டி தங்கம் வென்று கொடுத்தார். அதே ஃபார்மில் மாரியப்பன் இருக்கிறாரா என்பது சந்தேகம்தான். சக இந்திய வீரர்களே அவருக்கு கடினமான போட்டியை கொடுப்பார்கள். இருந்தாலும் போடியத்தில் ஏறுமளவுக்கு எதாவது ஒரு பதக்கத்தை வென்றுவிடுவார் என்ற நம்பிக்கையே இருக்கிறது.
டோக்கியோ பாராலிம்பிக்ஸின் தொடக்க விழா அணிவகுப்பில் மாரியப்பன் தங்கவேலுவே இந்திய கொடியை ஏந்தி இந்திய வீரர்/வீராங்கனைகளை வழிநடத்தி செல்வதாக இருந்தது. ஆனால், மாரியப்பன் பயணம் செய்த விமானத்தில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் மாரியப்பன் குவாரண்டைனில் இருக்க வேண்டிய சூழல் உண்டானது. இதனால் தேக் சந்த் எனும் வேறொரு வீரர் மாரியப்பனுக்கு பதில் கொடியேந்தி சென்றார். குவாரண்டைன் ஒரு மன அழுத்தம் தரக்கூடிய விஷயம்தான் என்றாலும் மாரியப்பன் அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பார் என்றே நம்பப்படுகிறது.
இத்தனை சோதனைகளை தாண்டி களமிறங்கும் மாரியப்பன் அவரின் நம்பிக்கைப்படியே 2 மீட்டருக்கு மேல் தாண்டி உலக ரெக்கார்டோடு தங்கம் வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். மாரியப்பன் பங்கேற்கும் பிற்பகல் 3:55 மணிக்கு தொடங்கவிருக்கிறது.
Also Read
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !
-
2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு! : தி.மு.க சார்பில் வென்ற வேட்பாளர்கள் விவரம் உள்ளே!
-
“நமக்கும் அவர்களுக்குமான வாக்கு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே!” : தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“பச்சைக் கொடிக்கும் பச்சைப்பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல்..!” : முரசொலி தலையங்கம்!
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!