Sports

வில்வித்தையில் கொரியா சாதிப்பது எப்படி? : ஹாலிவுட் படங்களை மிஞ்சும் பயிற்சி முறை!

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் ஜூலை 23 முதல் 32வது ஒலிம்பிக் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், ஒட்டுமொத்தமாக 339 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. தற்போதுவரை சீன விளையாட்டு வீரர்கள் 14 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை குவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இதில் இந்தியா 1 பதக்கத்தை மட்டுமே பெற்றுள்ளது.

இந்நிலையில், வில்வித்தையைப் பொறுத்தவரை கொரிய வீரர்கள்தான் அதில் பேரரசர்கள் என்ற பெயர் உண்டு. அத்தனை ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் அவர்களுடைய கழுத்தையே அலங்கரிக்கும். இப்படி இருக்கையில் அவர்களின் இந்த திறமைக்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்!

ஒரு இடத்தையோ பகுதியையோ போல தத்ரூபமாக வடிமைக்கப்பட்டிருக்கும் சினிமா செட்களை நாம் பாத்திருப்போம். குறிப்பாக கபாலி படத்திற்காக தாய்லாந்தின் ஒரு தெருவை அப்படியே சென்னையில் செட் செய்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.

அதேபாணியைத் தான் கொரியா செய்துள்ளது. கொரிய வீரர்களில் வில்வித்தையில் சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக, டோக்கியோவில் அமைக்கப்பட்டிருக்கும் வில்வித்தை அரங்கத்தைப் போல அச்சுப்பிறழாமல் அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல ஒரு அரங்கை வடிவமைத்துள்ளனர்.

அதுமட்டுல்லாமல், டோக்கியோவில் வீசும் காற்றின் வேகத்தை போலவே, அந்த அரங்கில் மின்விசிறி கொண்டு செயற்கையாக காற்றை கூட்டி குறைத்து பயிற்சி செய்ய ஏற்பாடு செய்துகொடுத்துள்ளது கொரிய நாட்டு அரசாங்கம்.

மேலும் டோக்கியோ அரங்கில் மைக்கில் பேசும் சத்தம் போல ஸ்பீக்கர்களை வைத்து ஜாப்பனீஸில் பேசும் வர்ணனையாளர்கள் ஆட்களை அழைத்து வந்து கமெண்ட்ரி பேச வைத்துள்ளனர். மேலும் அங்கு கடைபிடிக்கும் விதிமுறைகளையும் தவறாமல் கடைபிடிக்கும்படி வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இப்படி நுணுக்கமாக பல சூழல்களை கொரியாவில் உருவாகி ஒலிம்பிக்ஸுக்கு அந்நாட்டு வீரர்களை தயார் செய்து வருகிறது கொரிய அரசாங்கம். இப்படி சகல வசதியுடன் பயிற்சி எடுத்துக்கொண்ட கொரிய வீரரை அடானு தாஸ் வீழ்த்தியிருக்கிறார் என்றால் அது வரலாற்றுச் சாதனை தானே!

அதாவது மூன்று முறை பதக்கம் வென்றிருந்த ஓ ஜின் ஹியெக் எனும் தென் கொரிய வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அடானு தாஸ். ஒரு கொரிய வீரரை வீழ்த்துவதென்பது பலருக்கும் அசாத்திய விஷயமாக இருக்கும்போது, அடானு தாஸ் மிகச்சிறப்பாக ஆடி அவரை வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறார்.

கொரிய வீரரையே ஒருவரால் வீழ்த்த முடியுமானால் அவரால் பதக்கத்தையும் எளிதில் வெல்ல முடியும். அடானு தாஸ் சீக்கிரமே இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பரபரப்பின் உச்சத்தை தொட்ட போட்டி.. கொரிய வீரரை வீழ்த்தி வரலாறு படைத்த ‘அடானு தாஸ்’ : குவியும் பாராட்டு !